Cinema

“அந்த கொலைக்கு பின்னாடி இருக்குற காரணம் என்ன?” - உதயநிதியின் 'கண்ணை நம்பாதே'படம் எப்படி இருக்கு? | Review

தமிழில் பிரபல நடிகராக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். நடிப்பு ஒரு பக்கம், அரசியல் மறுபக்கம் என தனது பயணத்தை தொடங்கிய இவர், சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றபின், நடிப்பை விட, அரசியலில் கவனம் செலுத்தி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்தார். அதன் எதிரொலியாக பின்னர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அமைச்சராக பதவியேற்றபின், நடிப்பில் இருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் அமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்னர் இவர் 'கண்ணை நம்பாதே' என்ற படத்தில் நடித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, பூமிகா,, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கண்ணை நம்பாதே படத்திற்கு, சித்து குமார் இசையமைத்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டனர். தொடர்ந்து அண்மையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியது.

கிரைம், த்ரில்லர் ஜானெரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. முழுக்க முழுக்க சஸ்பென்ஸுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படம்இன்று (மார்ச் 17, 2023) திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

படம் எப்படி இருக்கிறது? :

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் உதயநிதி, பிரசன்னாவுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது, பூமிகா ஓட்டி வரும் கார் விபத்துக்குள்ளாகிறது. அப்போது உதயநிதி அவரை பாதுகாப்பாக அவரது காரிலே அவரை வீட்டில் விடுகிறார். அதற்கு கைமாறாக நேரமாகி விட்டது என்பதால், தனது காரை எடுத்து செல்லும்படியும், நாளை கொடுக்குமாறும் உதயநிதியிடம் பூமிகா கூறுகிறார்.

எனவே அதனை பெற்று கொண்ட உதயநிதி, மறுநாள் காலை பூமிகாவிடம் ஒப்படைக்க நினைக்கிறார். அப்போது எதேர்ச்சியாக அந்த காரின் டிக்கியை திறந்து பார்க்கையில் அதில் பூமிகாவின் சடலம் இருக்கிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.. ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வித்தியாசம் படும் வண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இருக்கும் வழக்கமான பட பாணியில்தான் குற்றம் யார் புரிந்தார்கள் என்று ஆடியன்ஸ் பார்வையில் கதைக்குள் சென்று பார்க்கும்படி அமைந்துள்ளது. பூமிகாவை யார் கொலை செய்தார்கள், பின்னால் இருக்கும் மர்மம் என்ன ? இதனை உதயநிதி கண்டுபிடித்து இந்த குற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பார் ? என்பதே மீதி கதை..

சில திரில்லர் படங்களில் ப்ளாஷ்பேக் காட்சிகள் போர் அடித்தாலும், இந்த படத்தை பொருத்தவரை ப்ளாஷ்பேக் காட்சிகள் நன்றாகவே உள்ளது. படத்தில் இடம்பெறும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தாமல் அடுத்தடுத்து நகர்ந்து சென்றுவிடுகின்றன. அடுத்தது என்ன என்ற கோணத்திலே ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த படம்.

ஒரு கிரைம் படத்திற்கு இருக்கக்கூடிய பின்னணி இசையை சித்து குமார் இதில் பலம் படுத்தியுள்ளார். எடிட்டர் சான் லோகேஷ், தனது பணியை கச்சிதமாக பிசிறு தட்டாமல் பக்காவாக ஷார்ப்பாக படத்தை எடிட் செய்துள்ளார்.

முன்னதாக மு.மாறன் இயக்கத்தில் வெளியான கிரைம், த்ரில்லர் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் வரவேற்பை பெற்றது. அதே போல் இந்த படமும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் எடிட்டர் சான் லோகேஷ்தான் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திற்கு எடிட்டர் ஆவார்.

தற்போது கண்ணை நம்பாதே படம் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: “தவறான படங்களை அனுப்புறாங்க.. இதனால்தான் நமக்கு கிடைப்பதில்லை..” - Oscar குறித்து AR ரகுமான் கருத்து !