Cinema

சமூக ஊடகங்களில் கொண்டாடப்படும் 'இரட்ட' என்ற மலையாளப் படம்.. அத்தனை சிறப்புகளுக்கு உகந்த படமா?

கடந்த சில தினங்களாக அதிகமாக பேசப்பட்டு வரும் படம், இரட்ட என்கிற மலையாளப் படம். ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம். பரவலாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அத்தனை சிறப்புகளுக்கு உகந்த படமா?

கதைப்படி வினோத்தும் ப்ரமோத்தும் இரட்டைப் பிறவி சகோதரர்கள். படம் வினோத்தின் மரணத்திலிருந்து தொடங்குகிறது. காவல் நிலையத்தில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்து உயிரிழந்து கிடக்கிறார் வினோத். தகவல் ப்ரமோத்துக்கும் கொடுக்கப்படுகிறது. அவனும் சம்பவ இடத்தை வந்தடைகிறான்.

வினோத்துடனான ப்ரமோத்தின் உறவு ஃப்ளாஷ்பேக்காக விரிய, இருவரின் கதையும் பின்னணியும் நமக்கு தெரிய வருகிறது. வினோத் பிரச்சினைக்குரியவன். சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துபவன், மது குடிப்பவன், பெண்களை வல்லுறவு செய்பவன், அடாவடியானவன் ஆனால் காவல்துறை துணை ஆய்வாளர். அவனுக்கு ப்ரமோத்தை பிடிக்காது. ப்ரமோத்தும் காவல்துறை அதிகாரிதான். வினோத் பணிபுரியும் காவல் நிலையத்தில்தான் பணிபுரிகிறான். ஆனால் வினோத்தின் இயல்பை பெரிதாக கண்டிப்பதில்லை. ப்ரமோத்துக்கு திருமணம் ஆகி விட்டது. மகள் இருக்கிறாள். ஆனால் மனைவி பிரிந்துவிட்டதால் மனைவியுடன் மகள் இருக்கிறாள்.

வினோத் மரணம் தொடர்பாக நான்கு பேர் மீது சந்தேகம் இருக்கிறது. மூன்று காவலர்கள், ஒரு கைதி. வினோத் அமர்ந்திருந்த அறைக்கு அருகேயே மூன்று அறைகள் இருக்கின்றன. ஒரு காவலர் அவசரத்துக்கு டாய்லட் சென்றிருக்கும்போது துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்து பார்க்கிறார். இரண்டாவது காவலர் சமையலறையில் ரகசியமாக மது அருந்திக் கொண்டிருக்கும்போது சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்க்கிறார். இன்னொரு காவலர் ஒரு பெண் காவலருடன் தனிமையில் இருக்கும்போது சத்தம் கேட்டதும் ஓடி வந்து பார்க்கிறார். மூன்று பேரும்தான் வினோத்தின் மரணம் நேர்ந்ததும் உடனே வந்து சம்பவ இடத்தை பார்த்தவர்கள். எனவே அவர்கள் மூன்று பேரின் மீதும்தான் சந்தேகம் எழுகிறது. சந்தேகம் வலுப்படும் வகையில் அந்த மூவருக்கும் வினோத்துக்கும் இடையே தனித்தனியாக சிக்கல்கள் முன்பு நடந்திருக்கின்றன. இவர்களன்றி காவல் நிலைய லாக்கப்பில் இருக்கும் கைதியும் சந்தேக வளையத்தில் இருக்கிறான்.

கதை ஒரு சின்ன ட்விஸ்ட்டை கொண்ட முடிவுடன் படமாக நிறைவடைகிறது. அந்த ட்விஸ்ட் ஒரு முக்கியமான விஷயமாக பாராட்டப்பட்டுதான் இப்படம் சமூக ஊடகங்களில் வரவேற்பை பரவலாக பெற்று வருகிறது.

ஜோஜு ஜார்ஜ் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவரின் நடிப்புக்கு இருக்கும் ஆதரவினால்தான் தமிழ்சினிமா வரை அவருக்கு வரவேற்பு இருக்கிறது. ஆனால் ஒருவகையில் இப்படம் ‘ஜோசஃப்’ பட ஜோஜூ ஜார்ஜையும் ‘நயட்டு’ பட ஜோஜு ஜார்ஜையும் நினைவுக்கு கொண்டு வருவதை தடுக்க முடியவில்லை.

மேலும் உடன்பிறந்த இரட்டைப் பிறவி கதைகளை நாம் அடிமைப்பெண் காலம் தொடங்கி, ஆளவந்தான் வரை பார்த்துக் கொண்டே வந்திருக்கிறோம். அதே அப்பா, அம்மா பிரச்சினை, வளர்ப்பில் சிக்கல், விளைவாக நேரும் கெட்ட தன்மை ஆகியவையும் நமக்கு புதிதாக இருக்கவில்லை. அதிலும் குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்வதிலெல்லாம் குற்றவுணர்வு கொள்ளாத வினோத், வேறொரு விஷயத்துக்கு குற்றவுணர்வு கொள்வதாகவும் பிற பெண்களை வல்லுறவு கொள்ளும் அப்பாத்திரம் அஞ்சலியை மட்டும் காதலிக்க விரும்புவதாகவும் சொல்வதற்கான வலுவான காரணங்கள் கதைகள் இல்லை.

வல்லுறவுக்கே கவலைப்படாதவன், முறைதவறிய வல்லுறவுக்கு வருத்தப்படுவதாக சொல்லப்படுவதும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. இந்த புள்ளிதான் கொண்டாடப்படுகிற க்ளைமேக்ஸ் ட்விஸ்ட். புரியவில்லை எனில் Netflix-ல் வெளியாகி இருக்கும் இப்படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள். புரிந்து விட்டால், அதே Netflixx-ல் இருக்கும் Incendies படத்தையும் பார்த்து விடுங்கள்.

Also Read: ”மூணு கடல் கூடும் குமரி கண்டத்துல”.. தெறிக்கவிடும் லுக்கில் சிலம்பரசனின் ’பத்து தல’ பட டீசர் வெளியானது !