Cinema

“எனது ‘ஏலே’படத்தை நீங்கள் நிராகரிக்கலாம், ஆனால்..” -மம்முட்டி படத்தை ஒப்பிட்டு பெண் இயக்குநர் ஹலிதா வேதனை

பொதுவாக சினிமாவில் பெண் இயக்குநர்கள் என்பதே குறைவு. காரணம் அவர்களுக்கு சினிமாவில் முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் சில பெண் இயக்குநர்கள் தங்கள் படைப்புகளை கடினப்பட்டு வெளிக்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு இயக்குநர்தான் ஹலிதா ஷமீம்.

இயக்குநர் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'ஓரம் போ' என்ற படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதில் தொடங்கிய தனது பயணத்தை தற்போது வரை தொடர்கிறார். 2014-ம் ஆண்டு சிறுவர்களை வைத்து 'பூவரசம் பிப்பீ' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய அளவில் பெயர் பெறவில்லை.

இதையடுத்து சுமார் 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2019- 'சில்லு கருப்பட்டி' என்ற படத்தை இயக்கினார்.ஹலிதா எழுத்து இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மணிகண்டன், சமுத்திரகனி, சுனைனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படம், இவருக்கு ஒரு பெயரையும் கொடுத்தது.

பின்னர் 2021-ல் சமுத்திரக்கனி இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'ஏலே' என்ற படத்தை இயக்கினார். நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குநர் ஹலிதா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "Stealing all the aesthetics from a film isn't acceptable.

'ஏலே' படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே.

இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது. ஐஸ்காரர் இங்கே பால்க்காரர். செம்புலி இங்கே செவலை. Mortuary van பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது.

நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலே- வில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார். படமாக்கப்பட்ட வீடுகள்,பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள்- இவை யாவும் படத்தில் பார்த்தேன். நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன!

எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன். You can dismiss my film Aelay, but I'll not be quite if the ideas and aesthetics from it is mercilessly ripped off." என்று குறிப்பிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.

'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படமானது கடந்த ஜனவரி 19-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மம்முட்டி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், மற்றும் மலையாளம் மொழிகளில் இந்த படம் வெளியானது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் பெற்றுள்ளது.

ஆனால் இந்த படத்தின் கதையும், ஏலே படத்தின் கதையும் வெவ்வேறு என்றாலும் கூட, அதில் வரும் சில கதாபாத்திரம் சார்ந்த விஷயங்கள் ஒத்துப்போவதாக இயக்குநர் ஹலிதா வேதனை தெரிவித்துள்ளார். அதோடு இந்த 2 படங்களில் போஸ்டர்கள் கூட ஒத்துப்போவதாக ரசிகர்கள், இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பொதுவாகவே தமிழ் திரை ரசிகர்கள் மலையாள திரைப்படங்களை மிகவும் பாராட்டி வருகின்றனர். ஆனால் அதே போல் ஒரு கதையை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தால் அதற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Also Read: “நான் செத்துடுவேனோனு ரொம்ப பயந்தேன்.. இன்னும் போராடிட்டுதான் இருக்கேன்..” - ENEMY பட நடிகை உருக்கம் !