Cinema

“அதான் அவரு இல்லையே நமக்கு தயிர் சாதமே போதும்..” பெண்களுக்கு எதிரான அடக்குமுறை குறித்து நடிகை சுஹாசினி !

தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் இன்றளவும் நின்று பேசுகிறது. இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் இந்திய அளவில் மாபெரும் ஹிட் கொடுத்தது.

இவரது மனைவி நடிகை சுஹாசினி. இவர் 90-களில் இருந்த தமிழ் முன்னணி நடிகையாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ரஜினி, பிரபு, சத்யராஜ், மோகன் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அப்போது இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருந்தது.

கமல்ஹாசனின் உறவினரான இவர், மணிரத்னத்தை 1988-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகும் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து அம்மாவாக, குணசித்திர கதாபத்திரமாக இவர் நடித்து வந்தார். தற்போதும் தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் பெண்களது சாப்பாடு குறித்து இவர் பேசியிருந்தார். இதுகுறித்து பேசிய அவர், "எங்க வீட்டுல சமையல் செய்வதற்கு ஒரு அம்மா இருக்கிறார். ஒரு நாள் எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் நான் அவரிடம் சமைத்து சாப்பிடலாம் என்றேன்.

அதிலும் சப்பாத்தி, குருமா, பருப்பு உசிலி என ருசியாக சமைத்து சாப்பிடலாம் என்றேன். அதற்கு அவரோ 'அதான் சார்தான் ஊர்ல இல்லையே.. நாம தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு தூங்கலாம்' என்றார். சார் இல்லைனா என்ன நாம சாப்பிடலாமே என்றேன். வேண்டாம்.. சார் இருக்கும்போது சமைக்கலாம் என்று என்னிடம் சொல்லிவிட்டார்.

பெண்களுக்கு சாப்பிட தயிர் சாதம் மட்டும் இருந்தால் போதும் என்று அவர் கூறியது போல் எனக்கு தோன்றியது. மேலும் பெண்களுக்கு எதுக்கு ருசியான உணவுகள் தேவை? என்பதுபோல் இருந்தது. ஆண்கள்தான் ருசியாக சாப்பிட நினைப்பார்களா ? அவர் பேசியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது" என்றார்.

இன்னமும் அநேகமான வீடுகளில் பெண்கள் இதுபோன்ற மனநிலைதான் கொண்டுள்ளார்கள். இதுவும் ஒருவகையான அடக்குமுறைதான் என்றே கூறலாம் .

Also Read: வேலை தேடும் வலைதளம் மூலம் பெண்களுக்கு ஆபாச வீடியோ.. அதிரடியாக கைது செய்யப்பட்ட Flipkart டெலிவரி பாய் !