Cinema

“ஏன் LADY SUPER STAR -னு சொல்லுறீங்க.. ” - மீண்டும் நயன்தாரா சர்ச்சையில் சிக்கிய மாளவிகா -பின்னணி என்ன ?

தமிழில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர், ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் அறிமுகமானர். தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் பிரபலமானார். அப்போது அவருக்கு தமிழ் ரசிகர் கூட்டம் அதிகரிக்க, தொடர்ந்து தமிழில் தனுஷுடன் 'மாறன்' படத்தில் நடித்தார்.

தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே மலையாளத்தில் 'கிறிஸ்டி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். வெளியீட்டுக்காக காத்திருக்கும் இந்த படம் வரும் 17-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அல்வின் ஹென்றி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மேத்யூ தாமஸ் கதாநாயகனாக காட்சியளிக்கிறார். இதில் மாளவிகா மோகனன் கிறிஸ்டி என்ற பெயர் கொண்ட டீச்சராக நடித்துள்ளார். தன்னைவிட வயதில் மூத்த பெண்ணான மாளவிகாவை காதலிக்கும் இளைஞனாக மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். இப்படத்திற்கான ப்ரோமோஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு தனியார் மலையாள ஊடகம் ஒன்றிற்கு மாளவிகா மோகனன் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் லேடி சூப்பர் ஸ்டார் குறித்து கேள்வி வைக்கப்பட்டது. இது தொடர்பாக நெறியாளர் லேடி சூப்பர் ஸ்டார் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த மாளவிகா, "லேடி சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நடிகர்களை எப்படி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கிறோமோ, அதேபோல் நடிகைகளை சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கலாமே. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கத் தேவையில்லை. பாலிவுட் நாயகிகளான தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்ஸ் தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே" என்று பதிலளித்தார்.

இவரது இந்த பேச்சு வெளியாகி வைரலாகி நயன் ரசிகர்கள் மத்தியில் வலுத்த கண்டனங்களை எழுப்பி வருகிறது. நடித்ததே சில படங்கள், அதற்குள்ளும் எதற்கு இப்படி ஒரு பேச்சு என்று பலவாறு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சர்ச்சை பூதாகரமான நிலையில், இதற்கு மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பதிவில், "நான் குறிப்பிட்டு எந்த நடிகையை பற்றியும் சொல்லவில்லை. பெண் நடிகைகள் பற்றி என்னுடைய கருத்தை தெரிவித்தேன். நடிகை நயன்தாராவை மிகவும் மதிக்கிறேன். அவர் ஒரு சீனியர் நடிகை, அவரின் வளர்ச்சி அசாத்தியமானது. அவரின் பயணத்தை நான் வியந்து பார்க்கிறேன். தயவு செய்து அமைதியாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாளவிகா ஏற்கனவே நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சர்ச்சைகள் எழுந்தது. நயன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'கனெக்ஷன்' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின்போது நயன்தாரா தன்னை பற்றி பேசியர்வர்கள் குறித்து பேசினார்.

அதாவது மாளவிகா அளித்த பேட்டி ஒன்றில், "ஒரு டாப் நடிகை ஹாஸ்பிடல் சீனில் தலைமுடி, லிப்ஸ்டிக் என அப்படியே புஃல் மேக்கப்பில் இருந்தாங்க, எப்படி ஒரு ஹாஸ்பிடல் சீன்ல இப்படி நடிச்சாங்க என்று தெரியவில்லை" என்று நயன்தாரா நடித்த ராஜா ராணி படம் குறித்து பேசி பேசியிருந்தார்.

இதனை குறிப்பிட்டு பேசிய நயன்தாரா, இதற்கு விளக்கமும் அளித்திருந்தார். நயன் பேசுகையில், "ஹாஸ்பிடல் சீனில் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே. கமர்ஷியல் ஃபிலிம், ரியலிஸ்டிக் ஃபிலிம்னு இருக்கு. ரியலிஸ்டிக் ஃபிலிம்ல அதற்கு ஏற்றமாதிரி அனைத்தும் கவனத்துடன் செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் இயக்குநர் என்ன சொல்கிறோரோ அதைத் செய்வது தான் ஒரு நடிகையின் வேலை" என்று பதிலடி கொடுத்தார்.

இது வெளியாகி மாளவிகாவுக்கு வலுத்த கண்டனங்கள் எழுந்தது. திரை ரசிகர்கள் குறிப்பாக நயன் ரசிகர்கள் மத்தியில் இது பெரிய பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் மாளவிகா மீண்டும் நயன் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

Also Read: நாட்டு நாட்டு : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு Dance சொல்லிக்கொடுத்த ராம்சரண்.. வீடியோ வைரல் !