Cinema

“17 வயதில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய எண்ணினேன்..” - பவன் கல்யாண் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி !

கடந்த 1996-ல் வெளியான 'அக்கடு அம்மாயி இக்கடு அப்பாயி' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், தனது தனி திறமையினால் ரசிகர்களை கவர்ந்தார். எனினும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி என்பதாலே இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்ததாகவும் இவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து தனது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வந்த இவர், இயக்குநர், திரைக்கதை, தயாரிப்பாளராக உருமாறினார். அதோடு இவர் பின்னணி பாடகராவும் இருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர், அரசியலில் கால் பதித்தார்.

தற்போது 'ஜன சேனா' என்ற கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவருக்கு தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில், இவர் எந்த படம் நடித்தாலும் வசூல் ரீதியாக ஹிட் அடித்து விடும். அதோடு இவர் தமிழில் வெளியான விஜயின் குஷி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வீரம் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார்.

அதோடு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் நடித்து வருகிறார். இருப்பினும் தனது அரசியல் வாழ்க்கையை இவர் விடவில்லை. அண்மையில் கூட ஆந்திராவில் வீடுகளை இழந்து தவித்த மக்களுக்கு ஆறுதல் கூற சினிமா பாணியில் கார் மீது அமர்ந்து மாஸாக தனது ஆதரவாளர்களுடன் இவர் சென்றுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆஹா ஓடிடி தளத்தில் 'Unstoppable' (அன்ஸ்டாப்பபிள்) என்ற டாக் ஷோ ஒன்று ஒளிபரப்பாகிறது. நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் பல திரைக்கலைஞர்கள் கலந்துகொள்வர். அந்த வகையில் இந்த ஷோவில் நடிகர் பவன் கல்யாண் பங்கேற்றார். அப்போது தனது ரகசியங்கள் பற்றி மனம் திறந்து பேசினார்.

அப்போது மனச்சோர்வுடனான தனது போராட்டங்கள் அதிகமாக இருந்ததாகவும், ஆனால்அதனை தான் எதிர்த்துப் போராடியதாவும் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், "எனக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. அதனால் நான் பல வருடங்களுக்கு முன்பு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். அதனால், நான் அதிகமாக வெளியில் பேசாமல் இருந்தேன். அப்போது எனக்கு 17 வயது இருக்கும். நான் தேர்வுகளினால் அதிகமான மன அழுத்தத்தில் இருந்தேன்.

இதனால் நான் தற்கொலை செய்யவும் எண்ணினேன். என் மூத்த சகோதரரிடம் (சிரஞ்சீவி) லைசன்ஸ் துப்பாக்கி இருக்கிறது. எனவே அவர் அப்போது வீட்டில் இல்லாத சமயத்தில் அதனை எடுத்து என்னை நானே சுட்டு தற்கொலை செய்ய எண்ணினேன்

இதனை அறிந்த என் அண்ணன் (சிரஞ்சீவி) என்னிடம், 'எனக்காக மட்டும் வாழு.. நீ வேறு எதுவும் செய்ய வேண்டாம்.. ஆனால் தயவுசெய்து உயிரோட இரு..' என்று கூறினார். அப்போதிலிருந்து, என்னை நானே கற்றுக்கொண்டேன்; புத்தகங்களைப் படிப்பது, கர்நாடக இசை, தற்காப்புக் கலைகள் மற்றும் பிற முயற்சிகளில் ஆறுதல் கண்டேன்" என்றார்

இவரது இந்த பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாண் தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகும் 'ஹரி ஹர வீர மல்லு' என்ற படம் இந்தாண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இதே Unstoppable ஷோவில் பங்கேற்ற தெலுங்கு, தமிழில் பிரபல நடிகையாக விளங்கும் ஜெயசுதா, "பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத்துக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து கங்கனா ரனாவத் பத்மஸ்ரீ விருதைப் பெற்றபோது, பலர் அவருக்கு விருது வழங்குவதை விமர்சித்தனர். ஆளும் பாஜக ஆதரவாளரான நடிகைக்கு விருது வழங்கப்பட்டது.

அவருக்கு அந்த விருது கிடைத்ததில் எனக்குப் பிரச்னையில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. இருப்பினும், அவர் 10 படங்களுக்குள் அந்த விருதைப் பெற்றார். இங்கே, நாங்கள் பல படங்களில் பணியாற்றிய நிலையில், ஒன்றிய அரசின் அங்கீகாரம் இன்றி இருக்கிறோம்.

உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநராக 2002-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் விஜய நிர்மலா இடம் பிடித்தார்.ஆனால் அவர் கூட இப்படி ஒரு பாராட்டை இந்திய அரசால் பெறவில்லை. ஒன்றிய அரசால் தென்னிந்திய திரையுலகம் அங்கீகரிக்கப்படவில்லை" என்றார்.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: “I LOVE YOU THREEங்க..” ஒட்டி பிறந்து 3 சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. கென்யாவில் வினோதம் !