Cinema

“4 வயது குழந்தையை கொலை செய்த பாட்டி.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்” - பின்னணி என்ன ?

சேலம் மாவட்டம், சூரமங்கலம் அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விமல்குமார் (30). தனியார் சிட் பண்ட் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கும், செவ்வாய்ப்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த மேகலா (25) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் மது பிரீத்திகா என்ற சிறுமி இருக்கையில், அண்மையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு மேகலாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மேகலா தனது இரு பிள்ளைகளுடனும், தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மேகலா துணி துவைத்து மாடியில் காய வைக்க சென்றிருந்தார். அப்போது சிறுமி பிரீத்திகா திடீரென்று கத்தி அழுதுள்ளார். ஆரம்பத்தில் பெரிதாக கவனிக்காத மேகலா, சிறுமி தொடர்ந்து கதறி அலறியதால், பதறிப்போய் கீழே வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தனது தாய் மற்றும் குழந்தையை காணவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து தொடர்ந்து இருவரையும் வீடு முழுக்க தேடிய போது, வீட்டிலுள்ள ஒரு அறை உள் பக்கம் தாழிட்டு இருந்துள்ளது. இதனால் அவர் தொடர்ந்து கதவை திறக்கும்படி கூறியுள்ளார். ஆனால் தாயாரோ கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் பதறிப்போன மேகலா, அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அங்கு பார்க்கையில் குழந்தையின் கழுத்தை அவரது தாயார் அழுத்தி நெரித்து கொண்டிருந்தார். இதனை கண்டு பதறிப்போன மேகலா, தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் சிறுமியின் கழுத்தில் நக கீறல்கள் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்ததால், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாட்டி சாந்திதான், தனது பேத்தியை கழுத்தை நெரித்து கொன்றுள்ள சம்பவம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இது குறித்து தொடர்ந்து விசாரித்தபோது, தாய் சாந்திக்கு மேகலா மற்றும் இன்னொரு மகளும் உள்ளனர்.

அந்த மற்றொரு மகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இதனால் தாய் சாந்தி மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். சில சமயம், மன நலம் பாதிக்கப்பட்டது போலும் நடந்து கொண்டுள்ளார். இதனால் அவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சாந்தியிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது சொந்த 4 வயது பேத்தியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பிறந்து ஒரேமாதத்தில் காணாமல் போன குழந்தை.. 8 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு: கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?