Cinema

தேசிய விருது முதல் பத்ம விருது.. பிரபல தமிழ் பாடகி வாணி ஜெயராம் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் (78) இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரது இயற்பெயர் கலைவாணி. கலைவாணி என்பதால் தானோ என்னவோ கலையான இசையில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.

தொடர்ந்து இசை கற்று வந்த இவர், 1971-ல் இந்தியில் வெளியான 'குட்டி' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஓடியா என 19 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். ஒரு பக்கம் திரையுலகில் இருந்தாலும், தனியாக ஆல்பம், பக்தி பாடல்கள் உள்ளிட்டவையையும் பாடி வந்துள்ளார்.

தமிழில் முதன்முதலாக 1974 ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் எம்.எஸ். விசுவநாதன் இசையில், கவிஞர் வாலி எழுத்தில் வெளியான 'மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும்..' என்ற பாடலை பாடி பிரபலமானார். தொடர்ந்து எல்லா வகையான பாடல்களையும் பாடி மக்கள் மனதில் தனி இடத்தையும் பிடித்தார்.

தொடர்ந்து மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, உள்ளிட்ட மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கலையுலகில் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதையும் இந்தாண்டு ஒன்றிய அரசு இவருக்கு அறிவித்தது. பத்மபூஷன் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் தான் ஆகிறது, அதற்குள்ளும் இவரது பிரிவு திரையுலகில் நீங்கா துயரம் அடைந்துள்ளது.

Also Read: விக்ரம் படத்தில் இடம்பெற்ற வசனம்.. LEO-வில் இணைகிறாரா கமல் ? - இணையத்தில் கசிந்த விஜய் பட தகவல் !