Cinema

கார் மீது கல் வீசி மோசமாக நடந்து கொண்ட தாடி பாலாஜி மனைவி : வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.. பின்னணி ?

தமிழில் காமெடி நடிகர்களில் நீங்கா இடம்பிடித்தவர்தான் தாடி பாலாஜி. நடிகராக மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாகவும் இருக்கிறார். இவருக்கு நித்யா என்ற மனைவியும் ஒரு மகளும் இருக்கும் நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து கோரினர்.

தொடர்ந்து அதன்பிறகும் ஒருவரை ஒருவர் வசைபாடியதோடு, ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகாரும் கொடுத்தனர். தொடர்ந்து இவர்களது சர்ச்சை பிக் பாசிலும் வெடித்தது. பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் இருவரும் பங்கேற்றனர். அங்கு சென்றாலாவது ஒன்று சேர்வார்கள் என்று எண்ணிய நிலையில், இவர்களுக்குள் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வரும் நிலையில், பாலாஜியின் மனைவி நித்யா, சென்னை , மாதவரம் சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கோபமடைந்த நித்யா நேற்று நள்ளிரவு, எதிர்வீட்டு உரிமையாளரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தி உள்ளார். இதையடுத்து காலை எழுந்து பார்க்கையில் தனது கார் சேதமாகியிருந்தது உரிமையாளருக்கு தெரியவந்தது. பின்னர் அவர் வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நித்யா, நேற்று இரவு கூரிய கல்லை கொண்டு அவரது கார் அருகே சென்றதும், காரில் கீறல் போட்டதும், மேலும் கார் கண்ணாடியை அடித்து உடைத்ததும் அதில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நித்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாதவரம் போலிசார், தொடர்ந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுக்கப்பட்டார். இந்த நிகழ்வு தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பதான் : “யார் வெறுப்பின் மீதான அன்பின் வெற்றி?”.. கங்கானாவின் விமர்சனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்.. Viral