Cinema

வாரிசா ? துணிவா ?.. டாஸ் போட்டு தேர்ந்தெடுத்த திரையரங்கம்.. உறைந்துபோன ரசிகர்கள் ! வெற்றி பெற்றது யார் ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள்தான் நடிகர் அஜித், விஜய். இவர்கள் இருவருக்கும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வேறு எந்த நடிகர்களின் ரசிகர்களும் அடித்துக்கொள்ளாத அளவிற்கு இந்த இருவரது ரசிகர்களும் மோதிக்கொள்வர்.

இவர்கள் இருவரது படங்களும் ஒரே நாளில் போட்டி போட்டு திரையரங்களில் வெளியானால் போதும், தமிழ்நாடே ரணகளமாக காட்சியளிக்கும் அளவிற்கு இருதரப்பு ரசிகர்களும் அலப்பறைகள் செய்வர். ஆனால் இருவரது படங்களும் திரையரங்கில் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் அடித்து விடும்.

இவர்கள் இருவரது படங்களும் நேருக்கு நேர் மோதுகையில் ரசிகர்களுக்கும் பெரிய மோதல் கூட வெடிக்கும். அந்த வகையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரது படங்களும் தற்போது நேருக்கு நேர் மோதவுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம்தான் 'வாரிசு'. தமன் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஜெய சுதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அதே நேரத்தில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம்தான் 'துணிவு'. ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த இரு படங்களின் ட்ரைலர்களும் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. பொங்கலை முன்னிட்டு வரும் 11-ம் தேதி (நாளை) தமிழகத்தில் இருக்கும் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது.

அதிலும் வாரிசு மற்றும் துணிவு தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் அந்தமானில் உள்ள ஆனந்த் பாரடைஸ் என்ற திரையரங்கில் இப்படங்கள் திரையிடப்படவுள்ளது. அங்கு 3 ஸ்கிரீன்கள் இருக்கும் நிலையில், ஒன்று துணிவு, மற்றொன்று வாரிசு என பிரித்துக்கொண்டனர். ஆனால் மூன்றாவதாக இருக்கும் திரையரங்கில் எந்த படத்தை திரையிடப்போவது என்று திரையரங்கு நிர்வாகம் குழப்பத்தில் இருந்தனர்.

ஏனெனில் வாரிசு திரையிட்டால் அஜித் ரசிகர்களும், துணிவு திரையிட்டால் விஜய் ரசிகர்களும் ரணகளம் செய்துவிடுவார்கள். இதனால் அனைவரும் சமரசமாக போக முடிவு செய்து அஜித் - விஜய் ரசிகர்கள் முன்னிலையில் டாஸ் போட்டு, அதில் வெற்றி பெருகிறாரோ அந்த படம் திரையிட வேண்டும் என முடிவு செய்தனர்.

அதன்படி இருதரப்பு ரசிகர்கள் முன்னிலையிலும் டாஸ் போட்டு பார்த்துள்ளனர். இந்த டாஸில் அஜித்தின் துணிவு வெற்றிபெற்றது. எனவே அந்த திரையரங்கின் மூன்றாவது ஸ்கிரீனில் அஜித்தின் துணிவு படம் திரையிடப்படவுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.