Cinema

சினிமா நடிகர்கள் படங்களுடன் சபரிமலை செல்ல தடை -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சபரிமலை சென்ற சிலபக்தர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட சினிமா நடிகர்களின் படங்களுடன் சென்றிருந்தனர்.

தரிசனம் முடிந்த பின்னர் கோயில் முன் நின்று நடிகர்களின் போஸ்டர்களை தூக்கி காண்பித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த பக்தர் ஒருவர் சபரிமலைக்கு சினிமா நடிகர்களின் போஸ்டர்களுடன் வருபவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேரளா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சபரிமலைக்கு சினிமா நடிகர்கள், அரசியல் வாதிகளின் போஸ்டர்களுடன் வருபவர்களை 18 ஆம் படியில் ஏற அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.

அண்மையில் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி சபரிமலை சென்றபோது சிறிது நேரம் கோயில் அருகே டிரம்ஸ் இசைத்தார். இதற்கும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பக்தர்கள் யாரும் இசைக்கருவிகளை இசைக்கக் கூடாது.பக்தர்கள் எந்த சிரமம், நெருக்கடி இன்றி தரிசனம் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் தவிர்த்த ஆளுநர் ரவி: சர்ச்சையை ஏற்படுத்திய பொங்கல் விழா அழைப்பிதழ்!