Cinema

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அது கொலை என கூறிய மருத்துவமனை பணியாளர்.. பகீர்!

இந்தி டிவி சீரியல்களில் நடித்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட், 2013-ம் ஆண்டு வெளிவந்த இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர், கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் பயோ பிக் படத்தின் தோனி கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார்.

அதன்பிறகு சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலை என வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கு அமலாக்க இயக்குநரகம் (ED), போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) மற்றும் மத்திய புலனாய்வுப் பணியகம் (CBI) ஆகியவற்றுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு மும்பை காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டது. அதோடு சுஷாந்த் போதையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்பட்ட நிலையில், சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபோர்த்தியை போதை மருந்து தடுப்பு போலிஸ் கைது செய்தனர்.

தொடர்ந்து விசாரித்ததில் போதை மருந்து தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம், சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாம்யூல் மிராண்டாவும், ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் செளபிக் சக்ரபோர்த்தியும் கஞ்சா வாங்கியதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும் சுஷாந்த் சிங்கின் வீட்டில் பணிபுரிந்த திபேஷ் சாவந்த் என்பவர் சுஷாந்த் மற்றும் ரியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க 165 கிராம் கஞ்சாவை வாங்கி அவர்களிடம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கஞ்சா புகைப்பதை தான் பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் அப்போது பெரிய பூதாகரமாக ஆன நிலையில் பாலிவுட்டில் நெபோடிசம் (nepotism) அதிகமாக காணப்படுவதாகவும் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சுஷாந்திற்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் மற்ற திரை பிரபலங்கள் தட்டி பறித்ததாகவும், இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் தற்போது புதிய திருப்பமாக திடுக்கிடும் தகவல்களை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். சுஷாந்த் இறந்த பிறகு அவரது உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். அப்போது அது தற்கொலை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அது கொலை என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சுஷாந்தின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவமனை பணியாளர் ரூப்குமார் ஷா என்பவர் சமீபத்தில் தனியார் மீடியாவுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், “சுஷாந்த் சிங் இறந்தபோது, கூப்பர் (cooper hospital) மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஐந்து இறந்த உடல்கள் கொண்டுவரப்பட்டது. அந்த ஐந்து உடல்களில் ஒன்று விஐபி உடல். நாங்கள் பிரேத பரிசோதனை செய்ய சென்றபோது, அவர் சுஷாந்த் என்றும், அவரது உடலில் பல அடையாளங்களும், கழுத்தில் இரண்டு முதல் மூன்று அடையாளங்களும் இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து உடற்கூறாய்வு மேற்கொள்ளும்போது வீடியோ எடுக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் உடலின் படங்களை மட்டுமே கிளிக் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். எனவே அவர்களின் உத்தரவின்படி நாங்கள் அதைச் செய்தோம். நாங்கள் சுஷாந்தின் உடலில் உள்ள காயங்களை பற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும், அவர்கள் அதனை சரிவர கேட்டுக்கொள்ளாமல், 'ரூல்ஸ் படி செய்யுங்கள்' என்று கூறினர்.

நான் முதன்முறையாக சுஷாந்தின் உடலைப் பார்த்தபோது, அது தற்கொலையல்ல, கொலை என்று உணர்வதாக எனது சீனியர்களிடம் தெரிவித்தேன். நாங்கள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். இருந்தாலும், சீக்கிரம் படங்களை க்ளிக் செய்து, உடலை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி என் சீனியர்கள் என்னிடம் சொன்னார்கள். எனவே, நாங்கள் இரவில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்தோம்" என்று ஷா கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சுஷாந்த் தற்கொலை வழக்கில், அது கொலை என்று பேசிய இவரது இந்த பேச்சு தற்போது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் இறப்பு வழக்கில் சில அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “தயவு செய்து குடிகாரனுக்கு பெண்களை கட்டிக் கொடுக்காதீங்க..” : குமுறும் ஒன்றிய அமைச்சர் - பின்னணி என்ன?