Cinema

வாரிசு AUDIO LAUNCH : “எனக்கு போட்டியாளர் இவரு தான்..” - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன தெரியுமா ?

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் விமர்சன ரீதியாக இவரது படங்கள் சில கீழே சென்றாலும், ரசிகர்களின் உற்சாகத்தால் வசூல் ரீதியாக மேலே வரும். அண்மையில் இவரது நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படமும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.

இதையடுத்து தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக ஒரு கும்பல் விமர்சித்து வந்தது.

இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களை தள்ளி வைத்து விட்டு, படம் வெளியீட்டுக்கு ரசிகர்கள் பெரிதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரைஸ்கர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் விஜய் மற்றும் பாடகி மானசி குரலில் வெளியான 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து வெளியான வாரிசின் இரண்டாம் பாடலான சிம்பு பாடிய 'தீ..' பாடல் வெளியிலாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாரிசின் மூன்றாம் பாடலான 'Soul Of Varisu - அம்மா' பாடல் வெளியாகியது.

பாடலாசிரியர் விவேக் எழுதி, பாடகி சித்ரா பாடியுள்ள இப்பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. தற்போது 7.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்த நிலையில் இதன் ஆடியோ வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் வரும் 24-ம் தேதி (நேற்று) வாரிசின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் என்று கடந்த 21-ம் தேதி படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

மாலை தொடங்கவிருந்த வாரிசின் பாடல் வெளியீட்டு விழாவை காண ரசிகர்கள் மூலை முடுக்கில் இருந்தும் படையெடுத்து வந்தனர். நேற்று ஆடியோ லான்ச் தொடங்கும் முன்பே ரசிகர்களிடம் இருந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரசிகர்கள் மற்றும் காவல்துறைக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயின் குட்டி ஸ்டோரியை கேட்கவே ரசிகர்கள் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி ரசிகர்களுக்கு நடிகர் விஜய் ஒன்று அல்ல இரண்டு குட்டி ஸ்டோரிகளை கூறினார்.

முதல் ஸ்டோரி :

“ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை இருந்தார்கள். தந்தை தனது குழந்தைகளுக்காக தினமும் சாக்லேட் வாங்கி வருவார். தங்கை தன்னுடைய சாக்லேட்டை சாப்பிட்டுவிடுவார், அண்ணன் தன்னுடைய சாக்லேட்டை அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்துச் செல்லலாம் என ஒரு இடத்தில் வைப்பார். ஆனால் இந்த தங்கை அதையும் எடுத்து சாப்பிட்டு விடுவார். இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் தங்கை தன்னுடைய அண்ணனிடம், 'அன்பு' என்றால் என்ன ? என்று கேட்டார். அதற்கு அந்த அண்ணன், நீ தினமும் உன்னுடைய சாக்லேட்டை சாப்பிட்டு விடுவாய். என்னுடையதும் எடுத்து சாப்பிடுவாய், நீ சாப்பிட்டுவிடுவாய் என்று தெரிந்தும் நான் அங்கு வைப்பேன். அதுக்கு பெயர்தான் அன்பு என்று கூறினார். அன்பு தான் உலகத்தை ஜெயிக்கக் கூடியது.” என்று கூறி தனது முதல் கதையை முடித்தார்.

இரண்டாம் கதை :

"1990 -களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளராக வந்தார். கொஞ்ச நாளிலே அவர் எனக்கு சீரியரஸான போட்டியாளராக மாறினார். அவரது தொடர் வெற்றியால் நானும் வேகமாக ஓட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். அவரைவிட அதிகமாக ஜெயிக்கணும் என்று நினைத்தேன். எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை. நான் போட்டிபோட்டு அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய்.. உங்ககூட நீங்க போட்டிபோடுங்க.

தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும். வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும். ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும். Compete With Yourself ; Be Your Own Competition!" என்றார். இவரது இந்த குட்டி ஸ்டோரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, ஆரவாரத்துடன் கத்தி கூச்சலிட்டனர்.

Also Read: “‘பராசக்தி’ படத்தின் தாக்கம், இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் ஆனாலும் இருக்கும்..” - இயக்குநர் வெற்றிமாறன் !