Cinema

“நயன்தாராவின் Connect படத்தை திரையிட மாட்டோம்..”: திரும்ப பெற்ற திரையரங்க உரிமையாளர்கள்? -பின்னணி என்ன?

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவரும் இவரது கணவர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து உருவாக்கிய 'ரெளடி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

அதன்படி ரெளடி பிக்சர்ஸின் தயாரிப்பில் அண்மையில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கனெக்ட்' படத்தையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பூமிகா படத்தின் இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். நயன்தாராவின் 'மாயா', டாப்ஸியின் 'கேம் ஓவர்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இப்படம், சுமார் 99 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் திரையிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். வரும் 22-ம் தேதி வெளியாகும் இப்படத்தை பல திரையரங்குகள் பெற்றுள்ளது.

ஆனால் இடைவெளி இல்லாமல் ஒரு படத்தை எப்படி திரையிட முடியும் என்ற கோணத்தில் யோசித்த திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிட மறுப்பு தெரிவித்து வந்தனர். ஏனென்றால் பொதுவாக இந்தியாவில் திரையரங்கில் படம் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இடைவெளி விட்டால் தான் ரசிகர்கள் தங்களுக்கு தேவையான தின்பண்டங்கள், குளிர்பானங்கள் வாங்க முடியும்.

இதனால் திரையரங்கில் இருக்கும் உணவு கடைகளுக்கும் நல்ல வியாபாரம் கிடைக்கும். இதையெல்லாம் யோசித்த திரையரங்கு உரிமையாளர்கள் இதுகுறித்து படக்குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் இடைவெளி நேரத்தை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் 59 நிமிடத்தில் 49 நொடியில் இடைவெளி வைக்கலாம் என சொல்லப்படுகிறது.

Also Read: அவதார் சுவாரஸ்யம் : அவதாராக அவதாரம் எடுத்த ஊழியர்கள்.. தனியார் மாலில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..