Cinema

துணிவு பாடல்: “மஞ்சுவாரியர் Voice எங்கடா ?” - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்களுக்கு மஞ்சு கொடுத்த விளக்கம்!

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'வலிமை' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்துள்ளது. அதன்படி தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் 'துணிவு'.

இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதும் என்று திரைவட்டாரங்கள் தெரிவித்தது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு பக்கம் துணிவு.. மறுபக்கம் வாரிசு.. என போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அப்டேட்களை வாரிவாரி இரண்டு படக்குழுவினரும் வழங்கி வருகிறது. அந்த வகையில் துணிவின் 'சில்லா சில்லா' பாடல் வெளியாகும் என துணிவு குழுவினர் அறிவித்த நிலையில், வாரிசின் 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

பின்னர் கடந்த 9-ம் அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' பாடல் வெளியாகி நேற்று வரை நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து வாரிசின் அடுத்த பாடலான 'தீ..' பாடல் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், நேற்று பகல் நேரத்தில் துணிவு படத்தின் இரண்டாம் பாடலான 'காசேதான் கடவுளடா' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்பாடலை, பாடகர் வைசாக் எழுதி பாடியுள்ளார். பின்னணி குரலாக நடிகை மஞ்சு வாரியர், ஜிப்ரான் குரல் கொடுத்துள்ளனர். முன்னதாக தான் துணிவு படத்தில் பாடியதாக நடிகை மஞ்சு வாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலை இவரும் பாடியுள்ளார்.

இந்த நிலையில் மஞ்சு வாரியர் பாடியதாக கூறப்படும் இப்பாடல் வீடியோவில் மஞ்சு வாரியர் பாடுவது போல் தோன்றுகிறார். ஆனால் அவரது குரல் கேட்கவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வியெழுந்துள்ளது.

அதோடு 'மஞ்சு வாரியர் Voice எங்கடா?' என்று நெட்டிசன்கள் பலரும் மீம்கள் போட்டு கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இது குறித்து நடிகை மஞ்சு வாரியர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "துணிவு படத்திலிருந்து 'காசேதன் கடவுளடா' பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் என் குரல் கேட்கவில்லையே என்று கவலை வேண்டாம். லிரிக்கல் வீடியோ பதிப்பிற்காக அது பதிவு செய்யப்பட்டது. உங்களுடைய அக்கறைக்கு நன்றி. வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று வெளியாகிய இப்பாடல் ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில், தற்போது வரை 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Beast படத்தை தொடர்ந்து வாரிசு.. விஜய் படத்தை 4 மாவட்டங்களில் வெளியிடும் Red Giant - அறிவிப்பு உண்மையா ?