Cinema

அவதார் 2-வுக்கு வந்த சோதனை : ‘படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்த நபர்.. ‘ - ஆந்திராவில் சோகம் !

இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் டைட்டானிக். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அவதார்.

இந்த படம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை செய்தது. அதோடு உலகம் முழுவதும் இந்த படத்தின் வெற்றி சாதனையை தற்போது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை. இப்படி சாதனை பட்டியலில் தற்போது வரை முதல் இடத்தில் இருக்கும் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவர் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று (16.12.2022) வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியிருக்கும் இந்த படம் அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. இந்த நிலையில் ஆந்திராவில் இன்று திரையரங்கில் இந்த படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் பெட்டபுறம் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் லக்ஷ்மிரெட்டி ஸ்ரீனு (42) என்ற நபர் ஒருவர் தனது தம்பியுடன் இன்று காலை 'அவதார் 2' படம் பார்த்து கொண்டிருந்தார். அப்போது சுவாரஸ்யமாக படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனை அருகிலிருந்தவர்களிடம் கூற, அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், அதிக மகிழ்ச்சி, உற்சாகம் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் கடந்த 2010-ம் ஆண்டு அவதார் படம் பிரான்ஸ் நாட்டில் திரையிடப்பட்டபோது, படம் பார்த்துக்கொண்டிருந்த தைவான் ரசிகர் (வயது 42) ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'தி கான்ஜுரிங் 2' (The Conjuring 2) படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உலகமே எதிர்பார்த்த அவதார் 2.. திரையிட நிராகரித்த தமிழக தியேட்டர்கள் .. அதிரடி முடிவுக்கு காரணம் என்ன ?