Cinema

“நா இன்னும் சாகல..” - சின்னத்திரை நடிகை கொலை விவகாரத்தில் புதிய திருப்பம்.. அதிர்ந்து போன திரையுலகம் !

மகாராஷ்டிர மாநிலம் மும்பை ஜூஹு என்ற பகுதியில் வசித்து வருபவர் வீணா கபூர் (74). பாலிவுட்டில் பழம்பெரும் சின்னத்திரை நடிகையான இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், இவர் தனது இரண்டாவது மகனான சச்சினுடன் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு 12 கோடி மதிப்புடைய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதனை இவரது இரண்டாவது மகன் தனது பெயருக்கு மாற்றித்தரும்படி வீணாவிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். ஆனால் அவரோ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

அதே போல் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே இது குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மகன், தனது வயது முதிர்ந்த தாய் என்றும் பாராமல் அடித்துள்ளார். மேலும் அருகிலிருந்த பேஸ்பால் மட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் வீணா உயிரிழந்தார். பின்னர் சடலத்தை எவ்வாறு மறைப்பது என்று யோசித்த மகன், அவரது வீட்டில் வேலை செய்யும் மண்டல் என்பவரை துணைக்கு சேர்ந்துகொண்டு வீணாவின் சடலத்தை ஒரு பெட்டியில் அடைத்துள்ளனர். பின்னர் அதனை காரில் எடுத்து சென்று சுமார் 90 கி.மீ., தொலைவிலுள்ள ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர்.

இதையடுத்து உண்மை வெளிவந்த நாளன்று, அமெரிக்காவில் இருக்கும் வீணாவின் மூத்த மகன், வீணாவுக்கு போன் செய்துள்ளார். பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை என்பதால் பதற்றமடைந்த அவர், பக்கத்து வீட்டாரை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீணா இல்லை என்பதால், காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து வீணாவின் இரண்டாவது மகனையும், அவருக்கு துணையாக இருந்த மண்டல் என்பவரையும் கைது செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நடிகை வீணா தான் இறக்கவில்லை என்றும், தவறான செய்தி பரவி வருகிறது என்றும் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “வீணா கபூர் என்பவர் கொல்லப்பட்டது உண்மைதான். ஆனால் நான் அவர் இல்லை.

கொல்லப்பட்டவர் பெயரும் வீணா கபூர். எங்கள் பெயர்கள் ஒன்றுதான், ஆனால் நான் மும்பையில் உள்ள கோரேகானில் என்ற பகுதியில் வசிக்கிறேன், ஜூஹு பகுதியில் அல்ல. நான் எனது மகனுடன் வசிக்கிறேன், அதனால் கொலை செய்யப்பட்டவர் நான்தான் என மக்கள் நினைக்கின்றனர்.

நான் உயிருடன் இருக்கிறேன், நலமாக இருக்கிறேன் என்று எல்லோரிடமும் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து போலி செய்திகளுக்கு இரையாகி விடாதீர்கள். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் மக்களுக்கு நடக்க கூடாது.

தவறான தகவல்களை பரப்பியவர் மீது தற்போது நான் புகார் அளித்துள்ளேன். தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகளால் எனது மனநிலை பாதிக்கப்படுவதால் வேலை பாதிக்கப்படுகிறது. இது கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது” என்றார். இவரது இந்த பேட்டி தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீணா கபூருடன் பணிபுரிந்து வந்த நீலு கோலி என்பவரே தனது சமூக வலைதள பக்கத்தில் வீணா கபூர் தனது மகனால் கொலை செய்யப்பட்டதாக பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: உருவக் கேலி விவகாரம் : அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்ட மம்முட்டி.. காரணம் என்ன ?