Cinema

ஆன்லைன் சூதாட்டம் : “உழைத்து சம்பாதிக்கும் பணம் தான் நிலைக்கும்..” - நடிகர் விஷால் காட்டம் !

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும், உதயநிதியின் நண்பருமான விஷால் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சேலத்தில் அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் தருணத்தை கடந்த 9 ஆண்டுகளாக நேரில் பார்க்கவேண்டும் என்று எனக்கு கனவாக இருந்தது. தற்போது அவர் அமைச்சரானதை பார்ப்பது ஒரு நண்பனாக மகிழ்ச்சி அடைகிறேன். இனிமேல் தான் உதயா என்ற நண்பன், உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த போகிறார்.

முதல்வரின் மகன் என்று, எந்த இடத்திலுமே பெயரை பயன்படுத்தாமல், எளிமையாக தனது தனிப்பட்ட முறையில் செயல்பட்டவர். தந்தை மற்றும் மகன் இருவரின் பேரும் இணைந்து 'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என பதவியேற்கும் உதயாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.

எனது நண்பர்கள் வட்டாரத்தில் மற்றொருவர் அமைச்சராவது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். தகுதியானவர்கள்தான் அமைச்சராவார்கள்; வாரிசு அரசியல் என்பது மேலோட்டமாக தெரியுமே தவிர, அந்தத் துறைக்கு தகுந்தவர்தான் அமைச்சராக இருப்பார். அதனால்தான் உதயநிதி ஸ்டாலின் இதற்கு தகுதியானவர் என அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை தலைவர்கள் வரவேற்பார்கள் என்பதை நம்புகிறேன். உதயநிதி முயற்சி, அணுகுமுறை, தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் எப்படி செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது பேச்சாலும், செயல்பாட்டாலும் அமைச்சருக்கான தகுதி அவருக்கு முழுமையாக உள்ளது" என்றார்.

மேலும் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் குறித்து பேசுகையில், “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். பலரது தற்கொலைக்கு காரணமாக இருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை கட்டாயம் தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க என்னை கேட்டபோது நான் மறுத்துவிட்டேன்.

உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே வாழ்க்கைக்கு உதவும். தவறான வழிகளில் கிடைக்கும் பணம் நிலைக்காது. மற்றவர்கள் சுதந்திரத்தில் நான் தலையிட மாட்டேன். நடிப்பதும், நடிக்காததும் அவரவர்கள் விருப்பம். பாதிக்கப்படுபவர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும்” என்றார்.

Also Read: பருத்திவீரன் 2 : “ரெண்டு பேரும் செத்து போய்ட்டாங்க.. எங்க இருந்து கூட்டி வாறது..” - இயக்குநர் அமீர் கலகல!