Cinema

சுரண்டல் அரசியல் களத்தை கொண்டிருக்கும் அவதார்.. இரண்டாம் பாகம் எதை சார்ந்திருக்கும்? - ஒரு பார்வை !

டிசம்பர் 16ம் தேதி அவதார் 2 வெளியாகவிருக்கிறது.

தமிழ் மக்கள் - வாரிசா, துணிவா என போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், சத்தமின்றி அவதார் 2-க்கு புக்கிங் தொடங்கப்பட்டு, ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிரம்பிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலையில் சென்னையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதார் 2 படத்துக்கு டிக்கெட்டுகள் இல்லை.

அவதார் படம் உலக சினிமாவுக்கு ஒரு முக்கியமான வரவு. 1997ம் ஆண்டு டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த படம்தான் அவதார். ஆனால் அது வெளிவந்தது 2009ம் ஆண்டு. ஒரு மெகாஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் அடுத்த படம் கொடுக்க ஏன் அத்தனை நாட்கள்? வாய்ப்பு கிடைக்கவில்லையா?

டைட்டானிக் படத்துக்கு பிறகு அவதார் படத்துக்கான தயாரிப்பு வேலைகளுக்காகவே ஜேம்ஸ் கேமரூன் அந்த இடைவெளியை எடுத்துக் கொண்டார். வழக்கமான கிராஃபிக்ஸ் உத்தி அவதார் படத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதற்கான concept art எனப்படும் பண்டோரா கிரகத்துக்கான சூழல், வாழ்க்கை முறை, உயிர்கள், செடிகள் யாவும் வரையப்பட்டு, அவற்றை கணிணி வரைகலையாக மாற்றி, பின் motion capture தொழில்நுட்பம் கொண்டு நடிகர்களின் நடிப்பை உள்ளீடு செய்து அப்படம் எடுக்கப்பட்டது.

கதைப்படி பண்டோரா என ஒரு கிரகம் இருக்கிறது. அங்கு நாவி என்ற மக்களினம் வசிக்கிறது. அவர்களின் வாழ்க்கை இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையாக இருக்கிறது. அவர்கள் வசிக்கும் இடத்தில் Unobtainium என்கிற தாது இருக்கிறது. பூமியில் அது விலைமதிப்பற்ற பொருள். எனவே பூமியிலிருந்து ஒரு நிறுவனம் அங்கு சென்று அந்த வளத்தை எடுக்க விரும்புகிறது. அறிவியலாளர்களும் ராணுவமும் நிறுவன மேலாளர்களுடன் சேர்த்து பண்டோராவுக்கு சென்று சேருகிறது.

நாவி மக்களுடன் ஒன்றாக கலந்து ஊடுருவி, தகவல்களை பெறவென மனித உடலிலிருந்து நாவி உடலுக்குள் புகும் கூடு விட்டு கூடு பாயும் அறிவியல் உத்தியுடன் அறிவியலாளர்கள் துணையுடன் மூவர் நாவி உலகத்துக்குள் செல்கின்றனர். அவர்களில் ஒருவன்தான் ஜேக் சுல்லி. நாவி இனப் பெண் நெய்தீரியுடன் பழகத் தொடங்கி அவர்களின் வாழ்க்கை முறையை அவன் தெரிந்து கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் ஈர்க்கப்பட்டு, வணிக நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக செயல்படத் தொடங்குகிறான். ராணுவம் அவனுக்கு எதிராக திரும்புகிறது. அறிவியலாளர்கள் அவனுக்கும் நாவி இனத்துக்கும் நிறுவனத்தில் லாபவெறிக்கும் எதிராக நிற்கின்றனர்.

நாவி மக்கள் வசிக்கும் பெருமரத்தை ராணுவம் அழிக்கிறது. அடுத்து அவர்கள் இருக்கும் பிற இடங்களையும் கைப்பற்றும் திட்டத்தில் ராணுவம் இருக்க, ஜேக் சுல்லி பிற இனக்குழுக்களை திரட்டி, இயற்கை உயிர்களுடன் சேர்ந்த மனிதர்களின் லாபவெறியை வீழ்த்துவதுதான் மிச்சக் கதை.

தொழில்நுட்ப ரீதியாக உச்சம் பெற்றிருந்த போதும் அப்படம் உலகில் நடந்து கொண்டிருக்கும் சுரண்டல் அரசியலை கண்ணுக்கெதிரே கொண்டு வந்து நிறுத்தும் கதைக்களத்தை கொண்டிருந்தது. அமெரிக்கா ஆக்கிரமித்த ஈராக், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நேர்ந்த சேதங்களை படம் உருவகித்து காண்பித்திருந்தது.

உலகெங்கும் பெருவெற்றி பெற்ற அவதார் படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. தொடர்ந்து அப்படத்தின் பல பாகங்கள் வருமென என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். மீண்டும் ஒரு 13 வருடங்கள் ஓடி முடிந்துவிட்டன. வரும் டிசம்பர் 16ம் தேதி அவதார் 2 பெரும் உழைப்பின் பலனாக வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில் ஜேக் சுல்லிக்கும் நெய்தீரிக்கும் திருமணம் முடிந்திருக்கிறது. குழந்தைகள் இருக்கின்றனர். மீண்டும் பூமியிலிருந்து நிறுவனம் கிளம்பி வந்து மொத்த பண்டோரா கிரகத்தையும் காலனியாக்க முயற்சிக்கிறது. அதன் முதல் கட்டமாக நீரையும் கடலையும் சுரண்ட நிறுவனம் முனைகிறது. ஜேக் சுல்லியும் நெய்தீரியும் எப்படி நிறுவனத்தின் திட்டத்தை முறியடிக்கிறார்கள் என்பதே கதை.

அவதார் முதல் பாகத்தில் ஒரு மழைக்காடின் தன்மைகளை வடித்து விவரித்திருந்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இரண்டாம் பாகத்தில் நீர் மற்றும் கடல் என்கிற அம்சத்தைக் கையில் எடுத்திருக்கிறார். நீர் சார்ந்த வாழ்க்கை முறையை எப்படி இயக்குநர் காட்டவிருக்கிறார் என்பதும் அதற்குள் எப்படியெல்லாம் உயிர்களை வடித்திருக்கிறார் என்பதையும் காணும் ஆர்வத்தில்தான் காட்சிகள் நிறைந்து கொண்டிருக்கின்றன.

சூழலைப் பார்த்தால், அவதார் 2 நிச்சயம் முதல் பாகத்தின் வசூலை வென்று விடும் என்றே தெரிகிறது.

Also Read: RRR முதல் PS 1 வரை.. IMDB-ல் கெத்து காட்டும் தென்னிந்திய சினிமா.. TOP 10 படங்கள் : ரசிகர்கள் உற்சாகம் !