Cinema

உயர்நீதிமன்ற வளாகத்தில் மீது திடீரென்று பறந்த Drone.. பிச்சைக்காரன்-2 படக்குழு மீது வழக்கு - என்ன காரணம்?

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. 2005-ல் விஜய் நடிப்பில் வெளியான 'சுக்ரன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். வெறும் இசைத்துறையில் மட்டும் ஆர்வம் இல்லதாவராக இருக்கும் இவர், 2006-ம் ஆண்டு வெளியான 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் திரையில் அறிமுகமானார்.

அதன்பிறகு 2012-ல் ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான 'நான்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், சைத்தான், பிச்சைக்காரன் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, அந்த படம் நல்ல லாபமும் ஈட்டியது.

விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கவுள்ளதாக விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங், காவ்யா தப்பர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இதற்கான மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிக்காக, சென்னை ரிப்பன் மாளிகை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் காவல் துறையிடம் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினர்.

இந்த நிலையில், என்.எஸ்.சி போஸ் சாலை, உயா் நீதிமன்ற வளாக பகுதியில் பிச்சைக்காரன் 2 திரைப்படக் குழு முறையான அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்டு காட்சிகளை பதிவு செய்தது. இது குறித்து தகவலறிந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் விரைந்து வந்து, ட்ரோனை பறிமுதல் செய்து, படக்குழுவைச் சேர்ந்த நவீன்குமார், சுரேஷ், ரூபேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களுக்கு ஜாமின் வழங்கி, எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால், உயர் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இது தமிழ் திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விஜய் ஆண்டனி, தமிழரசன் அக்னி சிறகுகள்,காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதில் தமிழரசன் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “நா சொன்னா ஓட்டே போடமாட்டிக்காங்க.. இத மட்டும் செய்வாங்களா?” - நடிகர் சரத்குமார் ஆதங்கம்!