Cinema

பிரபல சீரியல் நடிகை Baseball பேட்டால் அடித்து கொலை.. சொந்த மகனே வெறிச்செயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் வீணா கபூர். 74 வயதுடைய இவர், பாலிவுட்டில் பழம்பெரும் சின்னத்திரை நடிகை ஆவார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், இவர் தனது இரண்டாவது மகனான சச்சினுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருக்கும் இவரது மூத்த மகன், இவருக்கு போன் செய்துள்ளார். பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை என்பதால் பதற்றமடைந்த அவர், பக்கத்து வீட்டாரை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீணா இல்லை என்பதால், காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் வந்து இளைய மகனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தனது தாயை தானே கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "பழம்பெரும் நடிகை வீணா கபூரை அவரது இரண்டாவது மகனுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமார் 12 கோடி மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. அதனை தனது பெயருக்கு மாற்றி தரும்படி அவரது மகன் சச்சின் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். ஆனால் வீணாவோ, அதனை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதே போல் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே இது குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மகன், தனது வயது முதிர்ந்த தாய் என்றும் பாராமல், அவரை பேஸ்பால் விளையாடும் மட்டையை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

சடலத்தை மறைப்பதற்காக, மகனும், அவரது வீட்டில் வேலை செய்யும் மண்டல் என்பவரும் சேர்ந்து வீணாவின் சடலத்தை ஒரு பெட்டியில் அடைத்துள்ளனர். பின்னர் அதனை காரில் எடுத்து சென்று சுமார் 90 கி.மீ., தொலைவிலுள்ள ஆற்றில் தூக்கி வீசியுள்ள்ளனர். தற்போது வீணாவின் மகன் சச்சினையும், அவருக்கு துணையாக இருந்த மண்டல் என்பவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்" என்றார்.

பிரபல பாலிவுட் சீரியல் நடிகை வீணா கபூரை சொத்துக்காக அவரது சொந்த மகனே Baseball பேட்டால் அடித்து படுகொலை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “போலிஸ் தான் என்னை மிரட்டி சொல்ல வச்சாங்க..” - ஜூஸ் கொடுத்து காதலன் கொலை வழக்கில் காதலி அந்தர் பல்டி !