Cinema
தெலுங்கில் விஜயின் 'வாரிசு' பட வெளியீட்டுக்கு சிக்கலா ? - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய விளக்கம்!
தெலுங்கு மொழியில் விஜயின் 'வாரிசு' பட வெளியீடு சிக்கல் குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி விளக்கமளித்துள்ளார்.
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் முன்னணி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
தெலுங்கு இயக்குநரான வம்சியால் இயக்கப்பட்டு, தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜால் உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 'வரசுடு' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், அங்கு மகா சங்கராந்தியாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்மாநிலத்தில் நேரடி தெலுங்கு படங்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என அம்மாநில தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்குகளுக்கு அண்மையில் அறிவுறுத்தி உள்ளது.
இது திரைவாட்டாரத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ் திரையுலகில் இருக்கும் சந்தானம், லிங்குசாமி உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்தன. இது தென்னிந்திய சினிமாவில் பெரிய பேசுபொருளாக மாறிய நிலையில், இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு பிரச்னையை சுமூகமாக முடித்துள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத் தலைவரான முரளி இது குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்த் திரைப்படங்களைப் பண்டிகை காலங்களில் வெளியிடக் கூடாது என்று தெலுங்கு திரைத்துறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் பேசியுள்ளோம். சினிமா மொழி கடந்தது. இதனை மொழி பிரச்னை ஆக்க வேண்டாம் என்று பேசியுள்ளோம். அவர்களும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த முடிவைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்பப்பெறவேண்டும். எங்களையும் அந்த மாதிரி தீர்மானம் நிறைவேற்ற வைத்துவிடாதீர்கள் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை வாரிசு படத்திற்கு எந்தவித சிக்கலும் இல்லை. பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும். விஜய் என்ற நடிகருக்காக இப்படி பிரச்சினை வரவில்லை. அங்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிறது. விஜய் படம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது" என்றார்.
'வாரிசு' திரைப்படம் பண்டிகையையொட்டி தெலுங்கில் வெளியாவதில் எந்த வித சிக்கலும் இல்லை என தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!
-
வாக்களித்த மக்களை வேட்டையாடும் வழக்கத்தை பிரதமர் மோடி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு முரசொலி கண்டனம்!
-
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை! : அலட்சியத்தின் உச்சத்தில் த.வெ.க அரசு!
-
உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!