Cinema

"படப்பிடிப்பின் போதே அவருக்கு உடல் சரியில்லை.." -மறைந்த ஒளிப்பதிவாளர் சுதீஷ் குறித்து இயக்குநர் உருக்கம்!

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரான 44 வயதுடைய சுதீஷ் பப்பு, உடல்நல கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படத்திற்கு முதுகெலும்பு போல் இருப்பவர்கள் தான் ஒளிப்பதிவாளர்கள். ஒரு திரைப்படத்தை எந்த கோணத்தில் எப்படி சரியாக எடுக்க முடியும் என்று ஒளிப்பதிவாளர்களால் மட்டுமே சரியாக கூறமுடியும். அந்த வகையில் தென்னிந்தியாவில் பல ஒளிப்பதிவாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் சுதீஷ் பப்பு.

கடந்த 2012-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'Second Show' என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பின்னர் மலையாள திரையுலகில் சில ஹிட் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி கவனம் ஈர்த்தார்.

அதன் படி சமீபத்தில் மலையாள இயக்குநர் மஜூ இயக்கத்தில் வெளியான 'அப்பன்' திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஒரு தந்தை எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்ற கருத்தை முன்வைத்து கேலியாகவும், நக்கலாகவும், பிடிவாதமாகவும் உள்ளிட்ட எல்லாவற்றையும் கலந்து ஒரு டார்க் காமெடி படமாக எடுக்கப்பட்டது தான் 'அப்பன்'

இந்த படம் 'SonyLiv' என்ற ஓடிடி தளத்தில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுதீஷ், உடல்நல குறைவால் கடந்த 14-ம் தேதி காலமானார்.

இவரது ஒளிப்பதிவில் கடைசியாக வெளியான திரைப்படம் தான 'அப்பன்'. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாகவே 'Amyloidosis' என்று சொல்லப்படும் அரியவகை நோய் இருந்துள்ளது. அதன் காரணாமாக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் மேற்கொண்ட சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இவர் கடைசியாக ஒளிப்பதிவு செய்த 'அப்பன்' பட இயக்குநர் மஜூ, இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் "அவர் மிகவும் திறமையானவர். 'அப்பன்' படத்தின் படப்பிடிப்பின் போதே அவர் உடல்நலக்குறைவுடன்தான் இருந்தார். ஆனால், அவரின் இந்தத் துயர்மிகு இறப்பை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Also Read: “படுத்தப் படுக்கையாக இருக்கும் நிலையிலும் பாலியல் உறவு” : சமூகப் பிரச்சினையை பேசுகிறதா ‘அப்பன்’ படம்?