Cinema

"நா இன்னும் சாகல.." - பரவும் தவறான தகவலுக்கு நடிகை சமந்தா பதிலடி ! - இணையத்தில் வைரலாகும் VIDEO

'யசோதா' படத்தின் ப்ரோமோஷனுக்காக தனியார் மீடியாவுக்கு பேட்டியளித்த நடிகை சமந்தா கண்ணீர்மல்க பேசியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர், அத்தனை மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். சினிமா ஒரு புறம் இருக்க, காதலும் ஒரு புறம் இருந்தது. பல ஆண்டுகளாக இவரும் பிரபல தெலுங்கு திரை நட்சத்திரமான நாக சைதன்யாவும், காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

சுமூகமாக இருந்த இவர்களது உறவு கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருவரும் அவர்களது தனித்தனி வாழ்க்கையில் சினிமா, சீரிஸ் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியில் வெளியான 'The Family Man' சீரிஸின் மூலம் பாலிவுட்டில் சமந்தா மிகவும் பிரபலமானார் . இவர்களின் விவாகரத்திற்கு இந்த சீரிஸும் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

மேலும் அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் "ஊ சொல்றியா மாமா" என்ற பாடலில் நடித்ததன் மூலமாக இளைஞர்களின் மனதை மேலும் கொள்ளைக்கொண்டார். அதோடு 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் வெற்றியை தொடர்ந்து, தற்போது தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தனது தனிப்பாதையில் மூவிஸ், சீரிஸ் என நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் வரும் நவம்பர் 11-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள 'யசோதா' திரைப்படம் டப்பிங் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது தனக்கு மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூனே பிரச்னை (autoimmune disorder) உள்ளதாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதோடு தான் இதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வருவதாகவும், விரைவில் குணமடைந்து விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவரது பதிவை அடுத்து ரசிகர்கள், திரை பிரபலங்கள் அனைவரும் இவருக்கு ஆறுதலும், பாசிட்டிவான மோட்டிவேஷனும் கொடுத்து வருகின்றனர். இதனிடையே சமந்தாவிற்கு இருக்கும் இந்த பிரச்னை மிகப்பெரியது என்றும், இது உயிரையே பலி வாங்கும் அளவு உள்ளது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தும், பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் 'யசோதா' படத்தின் புரோமோஷனுக்காக தனியார் சேனல் ஒன்றிற்கு சமந்தா பேட்டியளித்தார். அப்போது சமந்தாவின் உடல்நிலை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சமந்தா, "வாழ்க்கையில் சில நல்ல நாட்களும் உண்டு, சில மோசமான நாட்களும் உண்டு. என் உயிருக்கு ஆபத்து என பலர் சொல்கிறார்கள். நான் சாகற நிலைமையில் இல்லை. 3 மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டதில் கொஞ்சம் குணமடைந்திருக்கிறேன். இந்த நோயிலிருந்து போராடி மீண்டு வருவேன். நான் மட்டுமல்ல இங்கு நிறைய பேர் பல கஷ்டங்களுடன் போராடி வருகின்றனர்" என்று கண்கலங்கியபடியே கூறினார்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சமந்தா கண்கலங்கிய படி பேட்டியளித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நடிகர் நாக சைதன்யா மற்றும் அவரது தந்தையும், சமந்தாவின் மாமனாருமான நாகராஜுன் ஆகிய இருவரும் சமந்தாவை நேரில் சென்று சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”ரசிகர்கள் எனக்கு சாமி மாதிரி.. அவங்க முன்னாடி அதை செய்யமாட்டேன்” -அமிதாப் விளக்கத்தால் அதிர்ந்த பாலிவுட்