Cinema

'பொன்னியின் செல்வன்' வெற்றி விழா கொண்டாட்டம்.. கல்கிக்காக படக்குழுவினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் !

பொன்னியின் செல்வன் கதையின் ஆசிரியரான கல்கிக்கு மரியாதை செலுத்தும் விதமாக கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் வழங்கியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகியது. இந்தியாவில் பான் இந்தியா படமாக உருவான இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என்று திரைபட்டாளமே நடித்துள்ளது.

பிரபல தமிழ் நாவல் எழுத்தாளரான கல்கியின் படைப்பில் உருவாக்கத்தில் உருவான இந்த கதையை தமிழில் பல திரை கலைஞர்கள் எடுக்க முயன்றனர். இந்த நிலையில் நீண்ட விடா முயற்சிக்கு பிறகு தற்போது மணிரத்னம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு விஷயங்களை செய்து வந்தனர்.

இந்த நிலையில் படம் வெளியாகி சுமார் ஒரு மாதத்தை கடந்து திரையரங்கில் வெற்றிநடை போடும் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டடையுள்ளனர். பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மணிரத்னம், லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுபாஷ்கரன், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம், ''என்னால் படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. அதன் பாதிப்பு நீண்டுகொண்டேயிருக்கிறது. இந்தப் படம் எனக்கு பெரிய எமோஷன். இத்தனை தலைமுறைகள் நாவலை படிக்க ஆரம்பித்துள்ளனர். நல்ல விஷயம் அது'' என்றார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசுகையில், ''எல்லோரும் ஒரு செட்டில் இருந்து பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. அதை இன்னும் 10 வருடங்களுக்கு பேசிக்கொண்டிருக்கலாம். படத்தை ப்ரமோட் செய்தது தன் அனுபவம். புது மக்கள், புது மொழியில் பேசியது சிறப்பாக இருந்தது. படத்தை திரையில் பார்க்கும்போது புதிதாக இருந்தது. தமிழ்நாடு கொண்டாடும் படமாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன்'' என்றார்.

மேலும் நடிகர் பார்த்திபன், 'மணிரத்னத்தின் மூலமாக 'பொன்னியின் செல்வன்' படம் திரைக் காவியமாகியிருக்கிறது. ஒரு படத்தில் 50 காட்சிகள் நடித்து, அந்தப் படம் 5 ஷோ ஓடுவது கடினமாக உள்ளது. வெறும் 5 சீன்கள் நடித்து ரூ.500 கோடி வசூலித்துள்ள படத்தில் நாம் இருக்கிறோம் என்பது பெருமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான விஷயம்' என்றார்.

பின்னர் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், ''இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்பது ஒரு பேராசை. அந்தப் பேராசைக்கு அங்கீகாரம் கொடுத்தவர்களுக்கு நன்றி. நடிகர், நடிகைகள் சிறப்பாக பணியாற்றினர். கொரோனா காலத்தில் வெயிட் போடாமல் கடினமாக உழைத்தவர்களுக்கு நன்றி'' என்றார்.

இதையடுத்து படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மெட்ராஸ் டாக்கீஸ் - லைகா சார்பில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘பொன்னியின் செல்வன்’ : ஓயாத சர்ச்சைகளும் விமர்சனங்களும் - காரணம் என்ன தெரியுமா? #PS1review