Cinema

பிரேம்ஜி பட இளம் இசையமைப்பாளர் ரகுராம் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இளம் இசையமைப்பாளர் ரகுராம் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், விதார்த், ரவீனா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'ஒரு கிடாயின் கருணை மனு'. திரை ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ரகுராம் (வயது 38). இந்த படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து சில திரைப்படங்கள், ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவற்றிற்கு இசையமைத்தார். இதனிடையே அவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்டது. மேலும் அவரது சிறு வயதிலே அவர் அரியவகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் அவர் நீண்ட நாள் வாழ இயலாது என்று மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகுராம் உடல்நல குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

வெறும் 38 வயதிலேயே உயிரிழந்த ரகுராமிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி, ரேஷ்மா நடிப்பில் வரவிருக்கும் 'சத்திய சோதனை' திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் ரகுராம் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சர்ச்சையில் சிக்கிய காந்தாரா பட குழுவினர்.. ‘வராக ரூபம்’ பாடலுக்கு தடை விதித்த நீதிமன்றம்.. என்ன நடந்தது?