Cinema

ஷாரூக்கானை தொடர்ந்து சல்மான் கான் ? - விஜய் படத்தை விட்டு பாலிவுட்டுக்கு செல்கிறாரா இயக்குநர் அட்லீ ?

பாலிவுட்டில் தற்போது ஷாரூக்கானை வைத்து பாலிவுட்டில் படம் இயக்கும் இயக்குநர் அட்லீ, இதை தொடர்ந்து சல்மான் கானை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நடித்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அட்லீ குமார். முன்னதாக இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், தனது முதல் படத்திலேயே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து விஜய் வைத்து 'தெறி' படத்தை இயக்கினார். இதுவும் மாஸ் ஹிட் கொடுக்க, பழைய கதைகளை புதிய வடிவில் கொடுப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாத அட்லீ, சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய 2 படங்கள் மூலம் தயாரிப்பாளரானார்.

மேலும் மீண்டும் விஜயை வைத்து 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கிய இவர், அதுவும் வசூல் ரீதியாக பெரிய ஹிட் கொடுத்ததையடுத்து தற்போது பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார். பாலிவுட்டில் அவரது முதல் படமே ஷாருக்கானை வைத்து இயக்குகிறார். அந்த படத்திற்கு 'ஜவான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். அதோடு இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் நடிகர் விஜய் இந்த படத்திற்கு சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 'ஜவான்' திரைப்படம் அடுத்தாண்டு திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இயக்குநர் அட்லீ பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ஜவான் படபிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், இயக்குநர் அட்லீ சல்மானை சந்தித்து கதையை கூறியதாகவு, அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து விரைவில் தகவல் வெளியாகப்போவதாகவும் சினி வட்டாரத்தில் கிசுகிசுக்க படுகிறது.

முன்னதாக நடிகர் விஜய்யின் 68-வது படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விளையாடும்போது நடந்த விபரீதம்.. அண்ணன் கண்முன்னே தம்பிக்கு நேர்ந்த துயரம்!