Cinema

புனித் ராஜ்குமார் படத்திற்கு வரிவிலக்கு.. கர்நாடக அரசின் அதிரடி அறிவிப்பின் பின்னணி என்ன ?

கன்னட திரையுலகின் செல்லப்பிள்ளை அப்புவாக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். சென்னையை பிறப்பிடமாக கொண்ட இவர், கன்னட திரையுலகின் நட்சத்திரமாக திகழ்ந்தார். நடிப்பில் மட்டுமல்லாமல், இசை, தயாரிப்பாளர் என்று சினி உலகில் பல அவதாரங்களையும் எடுத்துள்ளார்.

கலையையும் தாண்டி சமூக சிந்தனைகளையும் கொண்ட இவர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளார். இவருக்கென்று கன்னட திரையுலகில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு தனது 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக காலமானார்.

இவரது மறைவு கன்னட மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு அம்மாநில அரசு கெளரவ மரியாதையும் செலுத்தியது. அதோடு இவரது மறைவால் இவரது ரசிகர்கள் பெரும் சோகத்திலும் ஆழ்ந்தனர். மேலும் இவரது நினைவாக ரசிகர்கள் மட்டுமின்றி திரை நட்சத்திரங்களும் உதவிகள் செய்தனர்.

அந்த வகையில் அண்மையில் கூட நடிகர் பிரகாஷ்ராஜ் இவரது நினைவாக 'அப்பு' என்று ஆம்புலன்ஸ் சேவையை வழங்கினார். இந்த நிலையில் இவரது மறைவிற்கு முன்பு இவரது நடிப்பில் ஜேம்ஸ், கந்ததகுடி ஆகிய படங்கள் நடித்திருந்தார்.

இதில் ஜேம்ஸ் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கன்னட ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவரது நடிப்பில் கடைசியாக வெளிவரும் போகும் படமான 'கந்ததகுடி' இந்தாண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.

திரை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த படமானது, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதையம்சம் கொண்டதாக உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான இந்த படத்தின் டீசரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் "உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் அப்பு (புனித் ராஜ்குமார்) இன்னும் வாழ்ந்து வருகிறார்.

அறிவுக்கூர்மையான ஆளுமையுடன் ஆற்றல் நிறைந்தவராகவும், ஒப்பற்ற திறமை படைத்தவராகவும் விளங்கினார். இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் 'கந்ததகுடிக் ஒரு சமர்ப்பணம். இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 'கந்ததகுடி' படத்திற்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் அறிமுக விழாவில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அப்போது பேசிய அவர், "புனித் ராஜ்குமார் நம்மைவிட்டு சென்றுவிட்டதாக நினைக்க வேண்டாம். அவர் நம்முடன்தான் இருக்கிறார். புனித் ராஜ்குமார் நடித்துள்ள கந்ததகுடி கன்னட நாட்டின் கலை மற்றும் இயற்கைக்குப் பெருமை சேர்ப்பதாகவும், வனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். அதற்கு வசதியாக படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்" என்றார். இது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.