Cinema

சாந்தி திரையரங்கு விற்பனை வழக்கு : நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி!

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதால், சொத்துக்களை தங்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிட கோரி, சிவாஜி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதால், பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, சாந்தி, மற்றும் ராஜ்வி சார்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.

இந்த கூடுதல் மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அனைத்து சொத்துக்களிலும் தங்களுக்கு சமபங்கு உள்ளதாகவும், சாந்தி திரையரங்கு பங்கு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அக்‍ஷயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஈடுபடுவதாகவும், பிரதான வழக்கு விசாரித்து முடிக்கும் வரை இது தொடர்பனா சொத்துக்கள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது.

நடிகர் ராம்குமார், பிரபு தரப்பில், சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர், சதீஸ் பாரசுரன் ஆஜராகி, சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010 ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமான பணிகள் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக வாதிடப்பட்டது.

கூடுதல் மனுக்கள் மீது வாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று உத்தரவிட்டார்.

Also Read: 100 இளம்பெண்களின் ஆபாச வீடியோ: குவைத்தில் தலைமறைவாக இருந்த காசியின் கூட்டாளி கைது - ஏர்போர்ட்டில் அதிரடி!