Cinema

"எனது பார்வையை முற்றிலும் மாற்றினார்.." - நடிகர் அஜித் குறித்து பைக் ரெய்டு பயணி ஒருவர் பகிர்ந்து பதிவு !

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'வலிமை' படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித், போனி கபூர், எச்.வினோத் கூட்டணி இணைகிறது. இவர்களது கூட்டணியில் AK 61 எனப்படும் பெயரிடப்படாத படம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் இந்த கூட்டணியில் வெளியாகவிருக்கும் படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், படப்பிடிப்புக்கு தற்போது சிறு இடைவெளி கொடுத்திருக்கும் அஜித், முன்னதாக லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டார்.

மேலும் அங்கே அஜித் பைக்கில் சுற்றி வரும் வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்டவை இணையத்தில் வைரலாகியது.

இந்த நிலையில், வட மாநிலங்களுக்கு பைக்கில் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் அங்கு இளைஞர் ஒருவருக்கு உதவியுள்ளார். இது குறித்து அந்த இளைஞர் தற்போது தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.. எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும் என்பார்கள். முதன்முறையாக என் பைக் பயணத்தில் எனக்கு டயர் பஞ்சர் ஆகிவிட்டது. நான் அந்த சமயத்தில் உதவி தேடினேன். அப்போது எனது கனவு பைக்கானbmw 1250GSA, என்னை கடந்து சென்றது. நான் அவரை நோக்கி கையை அசைத்து அவரிடம் ஏர் கம்ப்ரஸர் கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் இருக்கிறது, ஆனால் அது பின்னால் வரும் காரில் தான் உள்ளது. ஒரு 10 நிமிடங்கள் ஆகும் என்றார்.

பின்னர் அவரிடம் நான் பேச்சுக்கொடுத்தேன்; அப்படியே அந்த பைக் பற்றியும் பேசினேன். பின்னர் அவர் என்னிடம், பெயர் மற்றும் நான் என்ன செய்கிறேன் என்று கேட்டார். இதையடுத்து, அவர் "ஹாய் நான் அஜித்" என்று அவரை அறிமுகப்படுத்திக் கொண்டார்!. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறினேன்.

அதன் பின்னர் கொஞ்சம் கூட யோசிக்காமல் பிறகு சூப்பர் ஸ்டாரே (அஜித்) இறங்கி அவரே எனது பைக்கை சரி செய்தார். அடுத்த இரண்டு மணி நேரம் நாங்கள் பயணத்தோம். பின்னர் தயங்கித் தயங்கி உங்களுடன் ஒரு டீ குடிக்கலாமா? அது எனக்கு ஒரு பாக்கியம் என்றேன். அடுத்த டீக்கடையில் டீ குடித்தோம். தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் அவரது முந்தைய ரூட் மேப்பைப் பற்றி உரையாடிய பின், நாங்கள் பயணிக்கும் ரூட்டை கேட்டு எங்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினார்.

நான் இந்த சம்பவத்தைப் பதிவிட இரண்டே காரணங்கள் தான் :

1. மிகப் பெரிய மனிதர் ஒருவர் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் எளிமையான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்... அவருடைய ரசிகர்கள், மக்கள் மீது அற்புதமான அன்பைக் கொண்டிருக்கிறார்.

2. எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. அவர் எனது பார்வையை முற்றிலும் மாற்றினார்" - என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜித்தை பற்றி இளைஞர் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகமும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

Also Read: இந்தித் திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும்? - ‘சித்திர புத்திரன்’ எழுதியதைப் படியுங்கள்!