Cinema

'பொன்னி நதி' பாடலை பாடிய பிரபல பாடகர் 49 வயதில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் !

தமிழில் பிரபலமான பல பாடல்களை பாடியவர் தான் பம்பா பாக்யா. இவர் தற்போது மாரடைப்பால் காலமான செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் 2010 ஆம் ஆண்டு விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான 'இராவணன்' படத்தில் " கிடா கிடா கறி" பாடலை தான் முதன்முதலில் பாடியுள்ளார். அதன் பிறகு 8 ஆண்டுகளாக பட வாய்ப்பு இன்றி தவித்து வந்த இவர் மீண்டும் திரைப்படத்தில் பாடினார். 2018 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2.O படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற "புள்ளினங்காள்" பாடலின் மூலம் தன்னை வெளிப்படுத்தினார்.

மேலும் அதே ஆண்டு "7-அப் மெட்ராஸ் கிக்" என்ற ஆல்பமமில் "ராட்டி" பாடலின் மூலம் திரையில் தோன்றி மிகவும் பிரபலமானார். இதையடுத்து மீண்டும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'சர்க்கார்' படத்தில் "சிம்ட்டங்காரன்", 'பிகில்' படத்தில் "காலமே காலமே", இரவின் நிழல் உள்ளிட்ட பல படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து அண்மையில் வெளியான "பொன்னி நதி" பாடலையும் இவர் பாடியுள்ளார். இந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் இவர் காலமானார். இவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு என்று திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

குறுகிய காலத்திலேயே பல ஹிட் பாடல்களை பாடிய பம்பா பாக்யாவிற்கு வயது 49 என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவன்: பா.ஜ.க ஆளும் ம.பி-யில் அவலம்!