Cinema

தியேட்டர் அதிபர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விஜய் தேவரகொண்டா.. ரசிகர்கள் அதிர்ச்சி : காரணம் என்ன ?

பிரபல தென்னிந்திய நடிகரான விஜய் தேவரகொண்டா 2001 ம் ஆண்டு வெளியான 'நுவ்விலா' என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், 'கீதா கோவிந்தம்' படத்தில் ரஷ்மிகா மந்தனாவுடன் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தார். இதன்மூலம் இவருக்கு பெண்கள் ரசிகர்கள் ஏராளமானோர் உருவாகினர்.

பின்னர் தமிழில் 'நோட்டா' படத்தில் நடித்திருந்தாலும் கூட இப்படம் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க தொடங்கிய இவர், மீண்டும் ரஷ்மிகா மந்தனாவுடன் 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்தார். இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியானது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் பூரி ஜகத்நாத் இயக்கத்தில் இவர் 'லைகர்' படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வெளியாகும் முன்னே இதனை இந்தி திரை ரசிகர்கள் 'லைகர் படத்தை புறக்கணியுங்கள்' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தனர்.

ஏனென்றால் 'லைகர்' படத்தை பாலிவுட் இயக்குநர் கரண்ஜோஹர் தயாரிக்கிறார் என்றவுடனே 'bycott liger' என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆனது. இதனிடையே படத்தின் ப்ரோமோஷன் பணியின்போது Youtube சேனலுக்கு பேட்டியளித்த விஜய் தேவரகொண்டா 'bycott' ட்ரெண்ட் ஹாஷ்டாகே குறித்த கேள்விக்கு, "யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம், படத்தை புறக்கணிப்பவர்கள் அதை செய்யட்டும்" என்று கூறியுள்ளார். இதனால் கோபப்பட்ட திரை ரசிகர்கள் சிலர், ட்விட்டரில் 'bycott liger' என்ற ஹாஷ்டாகை மறுபடியும் ட்ரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் பான் இந்தியா அளவில் வெளியான இந்த படம் ஒரு மொழிகளில் கூட ஓடவில்லை. இதனால் பல திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், மும்பையை சேர்ந்த பிரபல திரையரங்கின் நிர்வாக இயக்குநரான மனோஜ் தேசாய் 'லைகர்' பட தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிரானப் பேச்சுதான் காரணம் என கடிந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, "'லைகர் படத்தை புறக்கணியுங்கள்' என்ற ஹேஷ்டேக் டிரெண்டானபோது, 'யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்' என்று ஆணவமாக விஜய் தேவரகொண்டா பேசியிருக்கிறார். இதனால்தான் ரசிகர்கள் படம் பார்க்க திரையரங்கிற்கு வரவில்லை. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரவேண்டாம் என்றால் ஓடிடி படங்களில் நடியுங்கள்" என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா மும்பை வரை சென்று அவரை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்று, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தான் எதற்காக அப்படி பேசினேன் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர் தேசாய் நடிகர் விஜய் தேவரகொண்டாவை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தாவது, "விஜய் தேவரகொண்டா பேசியதை நான் முழுமையாக பார்க்காமல்தான் பேசிவிட்டேன். அவர் நல்ல மனிதர். அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது" என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா திரையரங்கு உரிமையாளர் காலில் விழுந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: "operation முடிஞ்சிருச்சு.. சீக்கிரமா school போகலாம்" -அறுவை சிகிச்சை முடிந்த சிறுமியிடம் முதல்வர் !