Cinema

'பாலியல் தொந்தரவு.. பண மோசடி புகார்.." - நடிகை அமலாபாலின் ஆண் நண்பர் கைது !

பிரபல திரைப்பட நடிகையான அமலா பால் 'மைனா' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், விஜயின் 'தலைவா' படத்தின் மூலம் இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

சில வருடங்களிலே இவர்கள் இருவருக்குள்ளும் மன வேறுபாடு ஏற்படவே தங்களது பந்தத்தை 2017-ம் ஆண்டு முறித்துக்கொண்டனர். இருப்பினும் தனது நடிப்பை விடாத அமலாபால் பெண் முன்னணி கதாபாத்திரம் கொண்ட படமான 'ஆடை' படத்தில் நடித்தார். பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த இப்படம் இரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் மீண்டும் சில படங்களில் நடித்து, தற்போது இவரது நடிப்பில் ஓடிடியில் வெளியாகி இருக்கும் 'கடாவர்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், இவர் விவாகரத்து பெற்றதையடுத்து பஞ்சாப்பை சேர்ந்த திரைப்பட பைனான்சியர் பவ்நிந்தர் சிங் தத் என்பவருடன் அமலா பால் பழகி வந்துள்ளார். பிறகு அவர்கள் இருவரும் நண்பர்களுடன் இணைந்து (6T) பூவி திரைப்பட நிறுவனத்தினை, கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரிய முதலியார்சாவடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளனர்.

அப்போது நடிகை அமலாபாலை திருமணம் செய்து கொள்வதாக கூறி பவ்நிந்தர் சிங் தத் அமலாபாலுடன் ஒன்றாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை அமலாபாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் விடுவதாகவும், பண மோசடி செய்ததாகவும், பொருளாதார ரீதியாகவும்,தொழில் ரீதியாக துன்புறுத்தல் செய்வதாகவும் நடிகை அமலாபால், தனது ஆண் நண்பரான பவ்நிந்தர் சிங் தத் மீது விழுப்புரம் குற்றப்பிரிவிடம் கடந்த 26 ஆம் தேதி புகார் அளித்தார்.

இவரளித்த புகாரின் அடிப்படையில் 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், நடிகை அமலாபாலின் ஆண் நண்பரான பவ்நிந்தர் சிங் தத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அமலாபாலும், பவ்நிந்தர் சிங் தத்தும் திருமணம் செய்துகொண்டதாக வெளியான புகைப்படம் சர்ச்சையான நிலையில், அது வதந்தி என்று கூறி அதற்கு அமலாபால் முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தியேட்டர் அதிபர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விஜய் தேவரகொண்டா.. ரசிகர்கள் அதிர்ச்சி : காரணம் என்ன ?