Cinema

‘படிடா பரமா…’ : அம்பானி என நினைத்து நடிகர் அம்பானி சங்கரை ட்விட்டரில் Tag செய்து திட்டிய வடமாநில இளைஞர்!

தமிழில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர் அம்பானி சங்கர். அஜித் நடிப்பில் வெளியான 'ஜீ' படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு வெளியான ஆறு, வல்லவன், படிக்காதவன், குசேலன், அம்பாசமுத்திரம் அம்பானி என பல படங்களில் காமெடியனாக நடித்திருந்தார்.

கருணாஸ் நடிப்பில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அண்மையில் யாஷிகா நடிப்பில் வெளியான ஹாரர் படமான 'பெஸ்டி' படத்திலும் இவர் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி, இவர் தனக்கென்று சொந்தமாக youtube சேனல் வைத்து அதிலும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், இவரது பெயரான 'அம்பானி சங்கர்' என்பதை தவறாக புரிந்துகொண்ட ட்விட்டர் பயனர் ஒருவர், அம்பானி குடும்பத்தை டேக் செய்வதாக எண்ணி இவரையும் டேக் செய்துள்ளார். அதாவது, ட்விட்டர் பயனாரான தீப் சந்திரா என்பவர், தனது கடந்த 6 மாத வங்கி கணக்கின் விவரங்கள் குறித்து ஜியோ நிறுவனத்திடம் புகாரளித்துள்ளார்.

மேலும் இந்த புகாரை ஏற்கவில்லை என்றால் புகார் தொடர்பான புகைப்படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். இதற்காக அம்பானி என்று பெயர் வைத்துள்ள நபர்களை டேக் செய்துள்ளார். அதில் தமிழ் நடிகரான 'அம்பானி சங்கரையும்' டேக் செய்துள்ளார். இதையடுத்து இதனை screenshot எடுத்த நடிகர் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், "Twitter- ல வடக்கன்ஸ் நான் ஏதோ அம்பானி குடும்பத்தை சேர்ந்தவன்னு நினைச்சு என்னைய tag பண்றாங்க." என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சொத்துக்காக தாயையே துடிக்க துடிக்க கொலை செய்த கொடூர மகள்.. - கேரளாவில் அதிர்ச்சி !