Cinema
இதுதான் மலையாள சினிமாவின் தனித்துவம்.. தமிழ் சினிமாவுக்கு இதை எப்போது கற்றுக்கொள்ளும் ?
நம் சிந்தனைகள் ஆராயாத வெளியாக சைபர் வெளி இருக்கிறது. இன்றைய நிலையில் நாம் எல்லா வகை சமூகதளங்களையும் பயன்படுத்துகிறோம். எத்தனை பாமரராக இருந்தாலும் குறைந்தபட்சம் வாட்சப் செயலியை பயன்படுத்துபவராகதான் இருப்பார். இந்தளவுக்கு தன்னுடைய ராட்சதக் கொடுக்குகளை நம் வாழ்க்கைகளில் பரப்பி விரித்திருக்கும் சமூகதளம் பற்றிய பார்வை எதுவும் நம்மிடம் சொல்லிக் கொள்ளும்படி புகட்டப்படவில்லை.
கேரள சினிமாக்களில் சமூகதளம், இயந்திரமயம், கணிணி செயல்பாடு முதலியவற்றைக் கொண்டு பல்வேறு சாத்தியங்கள் திரையில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து உருவாக்கப்பட்டும் வருகிறது. மோகன்லால் நடித்து பெரும் வெற்றி பெற்ற ஜீத்து ஜோசப்பின் த்ரிஷ்யம் படம் அந்த வரிசையில் ஒரு முக்கியமான தடத்தைப் பதித்தது என சொல்ல முடியும்.
மகளின் புகைப்படத்தை செல்பேசியில் படமெடுத்த ஓர் இளைஞன் அதைத் தவறாக பயன்படுத்த முனைகையில் ஏற்படுகிற விளைவுகள்தாம் த்ரிஷ்யம் படம். சமூகதளம் உருவாக்கும் சிக்கல் என்பதை நேரடியாக படம் முன் வைக்கவில்லை என்றாலும் அதன் உள்ளீடாக இருப்பது என்னவோ அனுமதியின்றி பயன்படுத்தப்படும் நம் தனித்தகவல்களின் வீச்சுதான்.
த்ரிஷ்யம் போன்ற இன்னொரு படம், விக்ரிதி. பிஜூ மேனனும் சவுபின் ஷாகிரும் நடித்த இப்படத்தில் பொது இடத்தில் தூங்கிக் கிடக்கும் ஒருவரின் புகைப்படம் எடுக்கப்பட்டு, ‘தண்ணி’ அடித்து விட்டுக் கிடப்பதாக சமூகதளத்தில் பரப்பப்படுவதால் நேரும் விளைவுகளை அப்படம் பேசியது.
இன்னொரு படம் சி யூ ஸூன். பகத் பாசில் நடித்த இப்படம் கோவிட் தொற்றுக்காலத்தில் வெளியானது. மொத்தக் கதையும் கணிணியை வைத்தே படமாக்கப்பட்டிருந்தது. அனு என்கிற பெண்ணை ஜிம்மி என்பவன் இணையவழியில் காதலிக்கிறான். இருவரும் மனமொத்துப் போகிறார்கள். திருமணம் ஆவதற்கு முன் அனுவைப் பற்றி தெரிந்து கொள்ள ஜிம்மியின் நண்பனான கெவினை நாடுகிறார் ஜிம்மியின் தாய். கெவின் அனுவின் இணைய வாழ்க்கையை ஆராய்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நேர்கிறது. அவை எல்லாமுமே கணிணி வழியாகவே படத்தில் கதையாக விரிகிறது.
இன்னொரு படம் ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன். ரஷியாவில் நாயகன் பணிபுரிகிறான். அவனுடைய தகப்பன் கேரளாவில் வாழ்கிறார். மகனின் வாழ்க்கைத் தேர்வில் உடன்பாடு இல்லாத அப்பா. முதிர்காலத்தில் அப்பாவுடன் இருந்து அவரைப் பார்த்துக் கொள்ள முடியாத மகன். இருவரையும் சுற்றி அமைந்திருக்கும் கதையின் சுவாரஸ்யம் ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்தான். தனது இடத்திலிருந்து பார்த்துக் கொள்ளவென உதவியாக இருக்கும் வகையில் ஒரு ரோபோவை அப்பா வீட்டில் விட்டுச் செல்கிறான் நாயகன். அதில் அப்பாவுக்கு உடன்பாடு இல்லை. ஒரு கிராமத்துக்குள் ரோபா, மனிதருடனான பரிச்சயம் மற்றும் பழக்கம் என இயந்திரங்களுடனான உறவை ஆராயும் படமாக ஆண்டராய்ட் குஞ்சப்பன் விரிந்திருந்தது.
இவை மலையாள உலகில் வெளியான மிகச் சிலப் படங்கள்தான். எனினும் உலகின் ஓட்டத்துக்கு நம் வாழ்க்கைகளில் மாறும் கண்ணுக்கு புலப்படாத விழுமியங்களை முன் யூகித்து ஆராயும் ஆற்றலையும் வெளியையும் மலையாள சினிமா உலகம் பெற்றிப்பது ஆரோக்கியமான விஷயமாகவே இருக்கிறது.
தமிழ்ச்சூழலில் இத்தகைய முன் யூகங்களுடன் சமூக சிந்தனையும் இணைத்து திரைவெளி நிரப்பப்பட இன்னும் சற்று காலம் பிடிக்கலாம்.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!