Cinema

“இரவு நேரம், மலைப்பிரதேசம், மயானக் கொள்ளை..” : ட்விஸ்ட்டுகள் கதையில் நகரும் ‘சுழல்’ - சினிமா விமர்சனம் !

சுழல் என்கிற ஒரு தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கதை என்ன?

ஒரு மலை டவுனில் கதை ஒரு ஆலை. அதில் தொழிலாளர் தலைவனாக பார்த்திபன் இருக்கிறார். வேலை நிறுத்தம் நடக்கிறது. ஆலைக்கு ஆதரவாக காவலர்கள் தொழிலாளர்களைத் தாக்குகின்றனர், காவல் ஆய்வாளராக இருப்பவர் ஷ்ரெயா ரெட்டி. உதவி ஆய்வாளராக கதிர்.

பார்த்திபன் நாத்திகன் என்பதால் கடவுள் நம்பிக்கைக் கொண்ட அவரின் மனைவி ஓர் ஆசிரமத்துக்கு சென்று விடுகிறார். இரண்டு மகள்களில் மூத்தவள் கோயம்புத்தூரில் இருக்கிறார். இளையவள் பார்த்திபனுடன் வசிக்கிறாள். பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். ஆய்வாளர் ஷ்ரேயா ரெட்டி கணவரோடு அதே ஊரில் வசிக்கிறார். தம்பதிக்கு ஒரு மகன்.

வேலைநிறுத்தம் நடந்த இரவு ஆலை தீவிபத்துக்குள்ளாகி முற்றிலுமாக அழிகிறது. அங்கு முதல் ஆளாக பார்த்திபன் நின்று கொண்டிருக்கிறார். அச்சமயத்தில் இன்னொரு விஷயம் தெரிய வருகிறது. பார்த்திபனின் வீட்டில் இருந்த மகள் காணவில்லை. தீ விபத்துக்கான சந்தேகத்தில் பார்த்திபன் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறார். ஆசிரமத்திலிருந்து மனைவி மகளைக் காணவில்லை என்பதால் வந்து விடுகிறார்.

அச்சமயத்தில் பார்த்திபனின் மகளைப் பற்றி விசாரிக்கும் கதிருக்கு ஒரு தகவல் தெரிய வருகிறது. ஷ்ரேயா ரெட்டியின் மகன், பார்த்திபனின் மகளை பின்தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்தத் தகவல். தொழிற்சாலை எப்படி விபத்துக்குள்ளானது, பார்த்திபன் மகளும் ஷ்ரெயா ரெட்டியின் மகனும் என்ன ஆனார்கள் ஆகியவற்றை மயானக் கொள்ளைத் திருவிழாவினூடாக விறுவிறுப்பான மிச்சக் கதை சொல்கிறது.

மொத்தம் எட்டு எபிசோடுகள். தெளிவாக எட்டு திருப்பங்கள் தீர்மானித்து திசைதிருப்பி சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்கள். தொடரின் திரைக்கதையை புஷ்கர்-காயத்ரி தம்பதி எழுதியிருக்கின்றனர். முதல் நான்கு எபிசோடுகளை இயக்குநர் பிரம்மாவும் அடுத்த நான்கு எபிசோடுகளை அனுச்சரண் முருகையனும் இயக்கியிருக்கின்றனர்.

இரவு நேரம், மலைப்பிரதேசம், மயானக் கொள்ளை என ஒரு அற்புதமான த்ரில்லருக்கான கேன்வாஸாகக் களம் இருப்பதால் இயல்பாகவே நாம் கதைக்கு ஆட்படுகிறோம். அதே நேரத்தில் முதல் இரண்டு ட்விஸ்ட்டுகள் கதையில் வந்தததும் ட்விஸ்ட் வருவதற்கென ஒரு pattern இருப்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

பிறகு அந்த பேட்டர்னை ஒவ்வொரு எபிசோடிலும் எதிர்பார்க்கத் தொடங்குகிறோம். ஏமாற்றமின்றி அதே பேட்டர்னில்தான் திருப்பங்களும் நேர்கிறது. பெரியார், மார்க்ஸ் புகைப்படங்களை கதாபாத்திரங்களின் வீடுகளில் காண்பித்துவிட்டு, அப்பாத்திரங்களை கெட்டவர்களாகச் சித்தரிப்பது மட்டும் நம்மை நெருடாமல் இல்லை.

‘சுழல்’ ஆர்வம் ஏற்படும் வகையில் சுற்றப்பட்டிருக்கிறது!

Also Read: TTF VASAN -இதை நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இதை நம்மால் தவிர்க்கமுடியாது!