Cinema

த்ரில்லர் கதாபாத்திரத்தில் அருள்நிதி.. 4 பாகங்களாக உருவாகும் 'டிமாண்டி காலனி'- சீக்ரட்டை உடைத்த இயக்குநர்

பொதுவாக ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால், தொடர்ச்சியாக அந்த படத்தின் அடுத்தடுத்து பாகங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்திய சினிமாவில் அப்படி ஒரு விசயம் நடப்பது அபூர்வம். இதுவரை முதன்முதலில் இந்திய அளவில் பெரிதும் வெற்றி பெற்று அடுத்தடுத்து பாகங்கள் வெளியானது என்றால், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான 'கிரிஷ்' மற்றும் 'தூம்' திரைப்படங்கள் தான். இதைத்தொடர்ந்து சில தமிழ் படங்களும் அதன் வெற்றியை தொடர்ந்து, எடுத்த அடுத்த பாகங்கள் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றுள்ளன.

அதாவது சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்', விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி', ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா', சுந்தரசியின் 'அரண்மனை' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த பாகங்கள் வெளியானது. தற்போது இந்த வரிசையில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'டிமாண்டி காலனி' என்ற திகில் படமும் இடம்பெறவுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி', 'கத்தி' போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அஜய் ஞானமுத்து, அவரது சொந்த எழுத்து - இயக்கத்தில் முதல்முறையாக கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'டிமாண்டி காலனி'. அருள்நிதி, RJ ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படம், வித்தியாசமான கதையம்சத்துடன் ஹாரர், த்ரில் கலந்த படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, இதன் அடுத்த பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நேரத்தில், நயன்தாரா நடிப்பில் 'இமைக்கா நொடிகள்' படம் வெளியாகி அதுவும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. தற்போது நடிகர் விக்ரமை வைத்து 'கோப்ரா' படத்தை இயக்கி வரும் இவர், மீண்டும் 'டிமாண்டி காலனி'-யின் அடுத்த பாகம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அஜய் ஞானமுத்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், வெங்கி என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அருள்நிதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் நடிகர் அருள்நிதி அளித்த பேட்டி ஒன்றில், ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் அடுத்தடுத்து தொடர்ந்து 4 பாகங்களாக வெளியாக இருப்பதாகவும், அதற்கான கதைகள் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து ‘டிமாண்டி காலனி’ அடுத்தடுத்து நான்கு பாகங்களாக வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத ஒரு முழு திகில் திரைப்படம் தொடர் 4 பாகங்களாக வெளிவர போவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “எதிர்காலத்தில் மனித குலத்திற்கு இயந்திரங்கள்தான் துணையாக இருக்குமா?” : ‘Finch’ படம் சொல்வது என்ன ?