Cinema

‘அம்மா சத்தியமா இதுதான் உண்மை..” : ‘வாரிசு’ பட போஸ்டர் சர்ச்சையில் உண்மையை போட்டுடைத்த OTTO நிறுவனம்!

'பீஸ்ட்' படத்தை அடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 66-வது படமான இதில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்கள் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 66-வது படத்துக்கான போஸ்டர்களை டைட்டிலுடன் படக்குழு வெளியிட்டிருந்தது. விஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக 'வாரிசு' என பெயரிட்டுள்ள அந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலே இணையத்தில் வைரலானது.

தொடர்ந்து வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்ட்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. ஒருபுறம் இந்த இரண்டு போஸ்டர்களையும் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வந்த நிலையில், மறுபுறம் இதனை கிண்டல் செய்யும் விதமாக வழக்கம்போல் அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக இணையவாசிகள் மீம்களை உருவாக்கி பரப்பி வந்தனர்.

மேலும் முதலாவதாக வெளியிட்ட போஸ்ட்டரை, பிரபல ஆடை நிறுவனமான OTTO நிறுவனத்தின் விளம்பர புகைப்படத்தில் இருந்து காப்பி அடித்துள்ளதாக நெட்டின்சன்கள் கலாய்த்து வந்தனர். அந்த நிறுவனத்தின் விளம்பர புகைப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் கோட் சூட் போட்டு போஸ் கொடுப்பது போல் இருக்கும். இதையும் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து கிண்டல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் 'வாரிசு' படத்தின் போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதா என தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கு, OTTO நிறுவனமே விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக ஓட்டோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எங்களுடையே அனைத்து விளம்பரங்களுமே அசலாகத்தான் இருக்கும். 'வாரிசு' பட போஸ்டர் ஓட்டோவின் விளம்பரத்துடன் தொடர்புடையது அல்ல.

சில மீம் கிரியேட்டர்களால் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. வாரிசு படக்குழுவுக்கு எங்கள் தரப்பிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டதுடன், அதில் சர்ச்சைக்குள்ளான புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளது. OTTO நிறுவனத்தின் இந்த விளக்கம் விஜய் ரசிகர்களிடையே மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சோற்றில் உப்பு அதிகமானதால் ஆத்திரம்.. மருமகளை சுட்ட கொன்ற மாமனார்” : உ.பி-யில் நடந்த பரபரப்பு சம்பவம் !