Cinema

நிஜமான குசேலன் படக்காட்சி: தாதாசாகேப் பால்கே விருது விழாவில் நண்பனை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த ரஜினிகாந்த்!

திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்ற ரஜினிகாந்த், தனது நண்பர் ராஜ் பகதூரை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின் பேசிய உரையில், "கர்நாடக போக்குவரத்து துறையில் ஓட்டுநராக என்னுடன் பணிபுரிந்த என் நண்பன் ராஜ் பகதூரை நினைத்துப் பார்க்கிறேன். என்னுள் இருக்கும் நடிப்புத் திறனை அடையாளம் கண்டு, திரைத்துறையில் சேர அவன்தான் எனக்கு ஊக்கம் கொடுத்தான். என்னை இந்த துறைக்கு கொண்டுவந்த என் நண்பன் ராஜ் பகதூருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என உருக்கமாகப் பேசினார்.

குசேலன் படத்தின் இறுதிக்காட்சியில், "எனக்குள்ள ஒரு நடிகர் இருக்கான்னு, மொத மொத எனக்கே சொன்னது என் நண்பன் பாலு தான். எனக்குள்ள சினிமா என்கிற கனவை உருவாக்குனதே அவன்தான்" என பள்ளி மாணவர்கள் மத்தியில் நடிகர் அசோக் குமாராக, ரஜனிகாந்த் தன் இளமைக்கால நண்பன் பாலுவை பற்றி பேசியிருப்பார்.

அப்போதைய காட்சியில் பாலுவாக நடித்த பசுபதி தோன்றும்போது, ரஜினிகாந்த்தின் உண்மையான நண்பரான ராஜ் பகதூரும் இடம்பெற்றிருப்பார்.

அதேபோல, இன்று திரையுலகின் உச்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் மேடையில் ரஜினிகாந்த் தனது நண்பர் குறித்துப் பேசியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "திரைவானின் சூரியன்" : தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!