Cinema

“அவர்கள் நலனே முக்கியம்.. இப்போது வேண்டாமே..” - தொழிலாளர்களுக்காக நடிகர் அஜித் எடுத்த திடீர் முடிவு!

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சுமார் 52 நாட்களாக அனைத்து தொழில்துறைகளும் முடங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டுகட்ட ஊரடங்கின் போது முற்றிலும் முடங்கப்பட்ட தொழில்துறைகள், மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஐடி, தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் இயங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால், சினிமாத்துறைக்கு அப்படி எந்தவொரு கட்டுப்பாடுகளும் வகுக்கப்படாமல் இருந்தது. இதனால், நூற்றுக்கணக்கான படங்களின் ஷூட்டிங் தொடங்கி பின்னணி வேலைகள் வரை அனைத்தும் முடங்கின. இந்த நிலையில், படபிடிப்புக்கு பிந்தைய பணிகளை குறைவான பணியாளர்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்திருந்தது.

அதனையடுத்து, விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களின் பின்னணி வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. பல நாட்களாக சினிமா தொடர்பான எந்த செய்திகளும் வராத நிலையில், விரைவில் புதுப்படங்களின் ட்ரெய்லர் போன்ற அப்டேட்கள் கிடைக்கும் என ரசிகர்கள் ஆரவாரமடைந்தனர். அதில் அஜித் ரசிகர்களுக்கும் விதிவிலக்கல்ல.

வலிமை படத்தின் ஷூட்டிங் முடியாத நிலையில் இதுவரை படமாக்கப்பட்டதின் பின்னணி வேலைகள் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அது நடந்தேறவில்லை. ஏனெனில், கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் பணிகள் நடத்த வேண்டாம் என தயாரிப்பாளர் போனிகபூரிடமும், இயக்குநர் ஹெச்.வினோத்திடமும் நடிகர் அஜித் கேட்டுக்கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் முழுவதும் முடிவடைந்த பின்னர் படத்தின் வேலைகளை தொடங்கலாம் எனவும் அஜித் கேட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆகவே, வலிமை படத்தின் பணிகள் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் படத்தின் ரிலீசும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.