Cinema

தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி.. ரசிகர்களின் ஆதரவால் ‘சூர்யா’ படத்தின் OTT ரிலீஸுக்கு பெருகும் மவுசு!

36 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா, அதன் பிறகு அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை மீண்டும் பெற்றார். அண்மையில் வெளிவந்த ‘ராட்சசி’ படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்கு பல தரப்பில் இருந்து பாராட்டையும், விருதுகளையும் வாங்கிக் குவித்து வருகிறார்.

இந்நிலையில், தனது கணவர் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபனுடன் இணைந்து நடித்திருந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததால் ஏப்ரல் மாத இறுதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து தொழில் துறைகளும் முடங்கிக் கிடக்கிறது.

இதனால், நூற்றுக்கணக்கான படங்களின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தாக்கம் முடிந்து படம் வெளியாவதற்கு தாமதம் நேரலாம் என்பதால், தயாரிப்பாளரான நடிகர் சூர்யா ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பு ஓ.டி.டி. தளமான அமேஸான் ப்ரைமில் 9 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள திரையரங்க உரிமையாளர்கள் இதனையறிந்து கொதித்தெழுந்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இனி அவரது 2டி நிறுவனத்தின் படங்களை திரையிடப் போவதில்லை என்றும் கறாராக கூறியிருக்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்.

இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு சமயத்தில் படங்களை வெளியிட முடியாமல் ஏராளமான தயாரிப்பாளர்கள் முடங்கியுள்ள நிலையில் சூர்யாவின் முடிவு அவர்களுக்கு நல்ல சமயோசித நடவடிக்கையாக தெரிந்துள்ளது. ஆனால், இந்த முடிவு கொரோனா ஊரடங்குக்கு பிறகும் தொடர்ந்தால் திரையரங்க உரிமையாளர்களின் நிலை கேள்விக்குறியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, ஒருபுறம் தியேட்டர் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் #அன்புள்ளசூர்யா என்ற ஹேஷ்டேக்கில் அவரது செய்துவரும் கல்வி சார்ந்த நலத்திட்ட உதவி தொடர்பான பதிவுகளை வைரலாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

Also Read: சுதந்திர தினத்தன்று பறக்க வருகிறது “ஏர் டெக்கான்” : சூரரைப் போற்று ரிலீஸ் அப்டேட்!