Cinema

“மதுரை மண்ணின் மகளுக்கு மரணமேயில்லை” - ‘பரவை முனியம்மா’ பற்றி சிறப்பு பகிர்வு!

“இசை இளவரசிக்கு இல்லை மரணம்”

“சிங்கம் போல நடந்து வாரான் செல்லப்பேரான்டி..” என்று பாடி எல்லா பேரான்டிகளையும் ஆடவைத்தவர். அதுவரை அவரின் குரல் மட்டுமே தெரிந்தவர்களுக்கு திரையிலும் தெரிந்தார்.

ஊர் திருவிழாக்களில் சாமிக்கு அடுத்தபடியாக இவரில் பாடல்களே தரிசிக்கப்படும். ஸ்ப்பீக்கர் செட்டும் இவரின் பாடல்களும் இல்லாத திருவிழாக்கள் அறிதிலும் அறிது. திருவிழாக்களுக்கு போதையூட்டி உணர்ச்சி பரவசத்திற்கு அழைத்து செல்வதும் இவுங்க பாடல்களே.

“ஆடி வாரா மாரி ஆடிவாரா அக்னி சட்டித்தூக்கி ஆடிவாரா..” ணு பாடி சும்மா ஒக்காந்து இருக்குற சாமி சிலையவே ஆட வைத்துவிடுவார்.

தன்னன்னன்னே... ணானன்னே ணு கும்மி பாட்டு பாடினால் கும்மி அடிக்கத் தெரியாதவர்கள் ஆடாவிட்டாலும் அவர்கள் தசையாடும்.

ஒரு ஊரில் பிறந்தவர்கள் பிரபலமாவது இயல்பு ஆனால் இவரால் தான் இவரின் ஊரே பிரபலமானது. தனது ஊர் பெயரை அடைமொழியாக கொண்ட “பரவை முனியம்மா” மதுரை மாவட்டம் பரவை என்ற கிராமத்தில் 1937ல் பிறந்தார். தனது 30 வயதில் நாட்டுப்புறப்பாடல்களை பாடதொடங்கினார்.

தொடக்கத்தில் தனது குருவான மதுரையை சேர்ந்த s.பெருமாள் எழுதி கொடுத்த வரிகளை பாடல்களாக பாடிவந்தார். பல தலைவர்களை பற்றிய பாடல்களும், தனுஷ்கோடி ரயில் விபத்து மற்றும் மதுரை சரஸ்வதி பள்ளி இடிப்பு போன்ற வரலாற்று நிகழ்வுகளையும் எளிய மக்களின் பாடல்களாக பாடியவர்.

‘ நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் வாழும் நாகரீகம் ஓடி வந்து கெடுக்கும்..’ என்ற பாடல் மூலமாக முதலில் பலரால் அறியப்பட்டார் பரவை முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் மூலமாகவும் செலிபிரிட்டி ஆக முடியும் என உணர்த்தியவர். தனது 60வயதில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பல வெளிநாடுகளுக்கு சிறகடித்து பறந்து வந்தார்.

வாழ்நாளில் எளிய மக்களின் ரசனைக்கேற்ப பல நாட்டுபுறப்பாடல்கள் பாடியும், 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் தனது தனித்துவமான கணீர் குரலில் பல சினிமா பாடல்களை பாடியும் சுற்றித்திரிந்த பறவை இன்று தனது பயணத்தை முடித்து ஓய்வெடுத்துக்கொண்டது.

பரவை முனியம்மா மறைந்தாலும் அவரின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இவர் இல்லையென்றாலும் பட்டி தொட்டியெல்லாம் இவர் பாடலின் பயணம் தொடரும்.

மக்களின் அன்றாட வாழ்வில் கலந்து உறவாடிய மக்கள் மதுரை மண்ணின் மகளுக்கு மரணமேயில்லை.

எழுத்து - சரண் குமார்