Cinema

சொத்து கிடைக்காததால் மன உளைச்சல் : பிரபல வில்லன் நடிகரின் சகோதரர் திடீர் தற்கொலை!

புதுச்சேரி திருமுடிநகரைச் சேர்ந்தவர் கனகசபை (40). ஆனந்த்ராஜின் தம்பியான இவர் புதுவையில் வட்டிக்கு பணம் கொடுப்பது, சீட்டு பிடிப்பது போன்ற தொழில்கள் ஈடுபட்டு வந்தார். திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

தினந்தோறும் காலை வேளையில் கனகசபையிடம் சீட்டு பணத்தை கொடுக்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். அதுபோல, இன்று காலையும் சீட்டு பணம் கொடுக்க அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். வெகுநேரம் காத்திருந்தும் கனகசபை வீட்டுக் கதவை திறக்காமல் இருந்ததால் அவரது சகோதரிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு, கனகசபையின் சகோதரியும், அக்கம்பக்கத்தினரும் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அவர் மயங்கி கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார், கனகசபையின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கனகசபைக்கு ஆனந்த்ராஜை தவிர மற்றொரு இளைய சகோதரர் இருக்கிறார். அவர்களது பூர்வீக சொத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆனந்த்ராஜிடமும், மற்றொரு பங்கு இளைய சகோதரரிடம் இருந்துள்ளது. இளைய சகோதரர், கனகசபையின் பங்கை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் தனக்கு சொத்து கிடைக்காத கனகசபை விரக்தியடைந்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு தன்னுடன் இருந்த தாயாரும் காலமானதால் வெகு நாட்களாகவே கனகசபை மன உளைச்சல் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் இன்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் கனகசபை எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பாக போலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 15 நாட்களாக தன்னிடம் இருந்த சீட்டுப்பணத்தை வாடிக்கையாளர்களுக்கு சிறிது சிறிதாக கொடுத்து வந்துள்ளார் கனகசபை. திருமுடிநகர் பகுதி மக்களிடையே அன்பு பாராட்டும் வகையில் பழகிய கனகசபையின் இறப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.