Cinema

விஜய்யின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு எதிராக பா.ஜ.க ஆர்ப்பாட்டம் : சமூக வலைதளங்களில் கலாய்த்த ரசிகர்கள்!

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி விஜய் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டபோது, திடீரென படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்த வருமான வரித் துறையினர் விசாரணைக்காக விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

விஜய் மீதான வருமான வரித்துறை நிறைவடைந்து இன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டாம் சுரங்கத்தினுள் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை சுரங்க நுழைவாயிலில் கூடிய பா.ஜ.கவினர் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க மாவட்டத் தலைவர் சரவணசுந்தரம் தலைமையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கூடி, “நெய்வேலியில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பகுதிககள் தடை செய்யப்பட்ட பகுதி. அங்கு ஷூட்டிங் நடத்த எப்படி அனுமதி வழங்கினீர்கள். பணம் கொடுத்தால் ஷூட்டிங் நடத்தலாம் என்றால், நாங்களும் பணம் செலுத்துகிறோம், எங்களையும் செல்ஃபி எடுக்க அனுமதிக்க வேண்டும்.

இரண்டாம் சுரங்கத்தினுள் மாரியம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு கிராம மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கும்போது, கிராம மக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்” எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மந்தாரக்குப்பம் போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி வருகின்றனர். அதேநேரத்தில், சுரங்கத்தினுள் விஜய்யின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தகவல் பரவியதால், விஜய் ரசிகர்களும் நெய்வேலி என்.எல்.சி முன்பு கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், சமூக வலைதளங்களில் பா.ஜ.க-வை சீண்டும் விதமாக விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: நடிகர் விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்ற IT அதிகாரிகள் - ‘மாஸ்டர்’ ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!