Cinema

மிஸ் செய்யக் கூடாத டாப் 10 பிறமொழிப் படங்கள் 2019 #YearInReview

2019-ம் வருடம் தமிழ் சினிமாவைத் தாண்டி பிறமொழிகளில் வெளியான படங்களும் நம்மை ஆச்சரியப்படுத்தின. அப்படி, 2019-ல் பிராந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியான படங்களில், மிஸ் பண்ணக்கூடாத படங்களின் லிஸ்ட் இது. இது 2019ம் ஆண்டுக்கான தவிர்க்க முடியாத பிறமொழி படங்களின் தொகுப்பு!

1. கல்லிபாய் (GullyBoy)

ராப் பாடுவதில் ஆர்வம் கொண்ட, தாராவி இளைஞன் முராத். இந்தக் கதாபாத்திரத்தை வைத்தும், அவர் சார்ந்த இடத்தின் பிரச்னைகளை வைத்தும் கதைக் களத்துக்குள் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவையும் பேசியிருந்தார் இயக்குநர் ஸோயா அக்தர். இன்னொரு பக்கம் படத்தில் அட்டகாசமாக நடித்ததோடு சேர்த்து பல பாடல்களையும் பாடியிருந்தார் ரன்வீர். உடன் நடித்த அலியா பட், சித்தாந்த் சதுர்வேதி, கல்கி கோச்லின், விஜய் ராஸ், அம்ருதா சுபாஸ் என ஒவ்வொருவரின் நடிப்பும் படத்தை இன்னும் மெருகேற்றியது.

இப்படி ஒரு படத்தை முழுமையாக்க, கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் டிசைன் என என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் சேர்த்து மிக நேர்த்தியான படமாக வந்திருந்தது 'கல்லி பாய்'. 8 Mile படத்தின் சாயல் இருந்தது என்ற பேச்சுகள் எழுந்தாலும், அனைவருமே புரிந்து கொள்ளும்படி இருந்த, நிஜத்துக்கு நெருக்கமான தன்மை படத்தைத் தனித்தே காட்டியது. அமேஸான் ப்ரைமில் படம் வந்திருக்கிறது.

2. சொன்சிரியா ( Sonchiriya)

பாகிஸ் என்ற கும்பல் ஒரு திருமண வீட்டில் கைமாறும் வரதட்சணை பணத்தையும், நகையையும், பாத்திரங்களையும் கொள்ளையடிக்க ஊருக்குள் நுழைகிறது. அவர்களைப் பிடிக்க சிறப்பு தனிப்படை காவலதிகாரிகளும் வருகிறார்கள். கும்பலின் தலைவன் கொல்லப்பட, அதற்குப் பின் நடக்கும் நிகழ்வுகளே சொன்சிரியா படத்தின் கதை. மேலோட்டமாக ஒரு க்ரைம் த்ரில்லர் கதை போல் புலப்படும்தான். ஆனால் அதற்குள் சமூக சூழல், சாதிய வெறி, பெண்களின் மீதிருந்த ஆதிக்கம் எனப் பலதும் பேசியிருந்தது படம்.

படத்தில் நடித்திருந்த அத்தனை பேரின் நடிப்பும் மிகப் பிரமாதமாக இருந்தது ஒருபுறம் என்றால், விஷால் பரத்வாஜின் இசை இன்னொரு பிரமாண்டத்தை படத்துக்குக் கொடுத்தது. மிக அழுத்தமான களம் என்றாலும், சுவாரஸ்யமான கதை சொல்லலிலும் கவனம் ஈர்த்தது சொன்சிரியா. Zee5 தளத்தில் காணக் கிடைக்கிறது சொன்சிரியா.

3. போட்டோ கிராஃப் (Photograph)

குடும்பக் கடனை அடைப்பதற்காக மும்பை தெருக்களில் சுற்றுலாப் பயணிகளை புகைப்படம் எடுத்து சம்பாதிக்கும் சாதாரண ஆள் ரஃபி. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த பெண் மிலோனி. இருவரும் சில காலம் சந்தித்துக் கொள்ளும் சூழல் உருவாகிறது. இந்த சந்திப்புகளால், இரு வேறு வாழ்க்கைத் தரத்தில் இருக்கும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்கிற மிக எளிமையான கதை.

இந்தப் படத்தை மிக இயல்பாக நகர்த்துவதே நவாசுதீன் மற்றும் சன்யாவின் நடிப்புதான். அவர்களுக்கிடையே இருப்பது நட்பா, காதலா என வழக்கமான சினிமாக்களில் இருக்கும் விளையாட்டு எதுவும் இல்லாததே படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். மிக அமைதியாக, ஒரு ஆசுவாசத்தைக் கொடுக்கும்படியான படம். அமேஸான் ப்ரைமில் இப்படம் இருக்கிறது.

4. ஆர்ட்டிகிள் 15 (Article 15)

ஆர்ட்டிகிள் 15 வெளியாகி பலராலும் வரவேற்கப்பட்டதையும், இணையம் முழுக்க அதிர்வுகளை உண்டாக்கியதையும் உணர்ந்திருப்போம். அதற்குக் காரணம், படம் பேசிய விஷயத்தில் இருந்த தீவிரம்தான். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் காணாமல் போகிறார்கள். அதில் இருவர் தூக்கிலிடப்பட்ட நிலையில் பிணமாக கிடைக்கிறார்கள்.

மற்றொரு பெண் பற்றியும், இந்த மரணம் பற்றியும் விசாரிக்கத் துவங்குறார், காவல் அதிகாரி அயன் ராஜன். இந்த மரணங்களுக்குப் பின்னாலிருக்கும் சாதியத்தின் கோர முகத்தைப் பற்றி சொல்கிறது படம். படம் நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

5. ஜெர்சி & கேங்க் லீடர் (Jersy & Gang Leader )

வழக்கமான ஸ்போர்ட்ஸ் ட்ராமா படங்களில் இருந்து ஜெர்ஸி விலகி இருக்கக் காரணம், அது வெறும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டிருக்கவில்லை. அர்ஜூன் கதாபாத்திரம், அவனது வாழ்க்கையில் கிரிக்கெட் எவ்வளவு முக்கியமாக இருந்தது, பின்பு கிரிக்கெட்டை கைவிட்டு வேறு வேலைக்குச் செல்வது, வேலையிழந்து வீட்டில் இருக்கும்போது, காதல் மனைவியுடன் அவன் வாழ்க்கை எப்படியாக இருந்தது என ஒரு முழுமையுடன் படம் இருந்தது.

இதற்கு அப்படியே எதிராக, முழுக்க முழுக்க காமெடி கலந்து கொஞ்சம் எமோஷனலும் கலந்து உருவானது `கேங்லீடர்'. தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்த ஐந்து பெண்கள், அதற்கு காரணமானவனைப் பழிவாங்க, ரிவென்ஞ் கதை எழுதும் பென்சிலிடம் உதவி கேட்கிறார்கள். அதற்குப் பின்னர் நடக்கும் விஷயங்களே படம். இரண்டு படத்திலும் அனிருத்தின் இசை பெரும் பலம். இரண்டிலுமே நிச்சயம் என்டர்டெய்ன்மென்ட் கியாரண்டி. ஜெர்ஸி Zee5-யிலும், கேங் லீடர் அமேஸான் ப்ரைமிலும் காணக் கிடைக்கிறது.

6. ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா ( Sai Srinivasa Athreya)

துப்பறிவாளர் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, சின்னச் சின்ன பெட்டி கேஸ்களை தீர்த்துவைத்துக் கொடுக்கிறார். அப்படி எதிர்பாராமல், ஒரு காணாமல் போன பெண்ணைப் பற்றி விசாரிக்கத் துவங்க, அது இவரை ஆபத்தில் மாட்ட வைக்கிறது. இதிலிருந்து ஆத்ரேயா தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் கதை.

ப்ளாக் காமெடி ஃப்ளேவரில் ஆரம்பித்து, திடீரென படம் சீரியஸாக மாறி, பல திருப்பங்களை வைத்து கதையை நகர்த்தியிருப்பார் இயக்குநர் ஸ்வரூப். என்கேஜிங்கான படமாக உங்களைக் கவரும் இந்த Agent Sai Srinivasa Athreya படம் அமேஸான் ப்ரைமில் இருக்கிறது.

7. எவரு (Evaru)

பிரபலமான ஹோட்டல் அறையினுள் ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. உள்ளே ஒருவர் இறந்துகிடக்கிறார், கையில் துப்பாக்கியுடன் அழுது கொண்டிருக்கிறார் சமீரா. தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக கொலை செய்ததாக போலீஸில் சொல்கிறார். தொழிலதிபரின் மனைவி என்பதால், அவரை சட்டச் சிக்கலில் இருந்து தப்பிக்க வைக்க வருகிறார் விக்ரம். இந்த இருவரின் உரையாடலில் இருந்து அந்தக் கொலைக்கு முன்னால் நடந்த பல சம்பவங்கள் சொல்லப்படுகிறது.

நிஜமாக என்ன நடந்தது? யார் கொலையாளி? என மிக சுவாரஸ்யமாக நகரும் படம். இன்விசிபிள் கெஸ்ட் படத்தில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் நினைப்பே நமக்கு வராதபடிக்கு ஒரு மேக்கிங் இருந்தது படத்தின் பெரிய பலம். விக்ரமாக அத்வி ஷேஷ், சமீராவாக ரெஜினா இருவரின் நடிப்பும் அட்டகாசம். படம் அமேஸான் ப்ரைமில் இருக்கிறது.

8. மீக்கு மாத்ரமே செப்த்தா (Meeku Maathrame Ceptha)

திருமணத்துக்கு முந்தைய நாள் ராகேஷுக்கு வரும் ஒரு விவகாரமான வீடியோ ஒன்றால் ஏற்படும் கலாட்டாக்களை வைத்து மிக ஜாலியான படம் ஒன்றை எடுத்திருந்தார் இயக்குநர் சமீர் சுல்தான். அந்த வீடியோவை திருமண வீட்டில் யாராவது பார்த்துவிட்டால், காதலித்த பெண்ணையே திருமணம் செய்யும் பொன்னான வாய்ப்பை இழக்கும் அபாயம். அது என்ன வீடியோ, பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு ஜாலியான படமாக இருந்தாலும், ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய், அதை மறைக்க இன்னொன்று எனச் சொல்வதால் எவ்வளவு சிக்கல் வரும் என்பது, உண்மையை வைத்து கூட நம்மால் பிரச்னைகளை சரி செய்ய முடியும் என படம் சொல்லாமல் சொல்லும் ஒரு மெசேஜும் மனதில் வந்து விழும்.

9. கவலுதாரி (Kavaludaari)

போக்குவரத்துக் காவலராக இருக்கும் ஷாமுக்கு, க்ரைம் கேஸ்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம். மெட்ரோ பணிகள் நடக்கும் இடத்தில் மூன்று மண்டை ஓடுகள் இருப்பதை கவனிக்கிறார் ஷாம். இந்த கேஸில் இருந்து விலகி இரு என ஷாமை உயரதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். இருந்தும் அன்-அஃபீஷியலாக இந்த கேஸை விசாரிக்கத் துவங்குகிறார்.

பிறகு என்ன நடக்கிறது என்கிற இன்வஸ்டிகேஷன் த்ரில்லர்தான் படம். பரபர த்ரில்லர் இல்லை என்றாலும், ஆர்வமாக பார்க்கும் நம்மை படத்தோடு ஒன்றவைத்துவிடும் திரைக்கதை இருக்கிறது. அதுவே படத்தின் பெரிய பலம். அமேஸான் ப்ரைமில் படம் காணக் கிடைக்கிறது.

10. கன்டுமூட்டே (Gantumoote)

மீரா என்கிற பெண்ணின் பார்வையில் தான் முழுப் படமும் நகர்கிறது. அவளது பதின்வயது முதல் கல்லூரி வாழ்க்கை வரையிலான காலகட்டம், அதற்குள் அவள் கடந்து வந்த விஷயங்களை மையமாக வைத்து வாழ்க்கை மீதான அவளது புரிதல்களைச் சொல்லும் படம்.

இதற்குள் காதல், பெற்றோர், கல்வி, நட்பு, ஆண் - பெண் உறவு எனப் பல விஷயங்கள் பற்றியும் எந்த போதனையும் இல்லாமல், ஒரு பார்வையை மட்டும் மீரா மூலம் முன்வைக்கிறார் இயக்குநர். கன்னட சினிமாவுக்கே இது மிகவும் புதுமையான ஒரு படம்தான். அமேஸான் ப்ரைமில் இப்படம் காணக் கிடைக்கிறது.