Cinema

வேட்டையாடி விளையாடும் ‘ஜல்லிக்கட்டு’ : ஏன் தியேட்டரில் மிஸ் பண்ணக்கூடாத படம் ?

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் மலையாள திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’. இந்தப்படம் கடந்த 4ம் தேதி திரையரங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படம் எழுத்தாளர் எஸ்.ஹரீஷ் எழுதிய 'மாவோயிஸ்ட்' நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இந்தப்படத்தில், செம்பன் வினோத், சபுமோன் அப்து சமாத் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தன் முந்தைய படங்களின் நீட்சியாகவே இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். ஈமாயு, அங்கமாலி டைரீஸ் என தன் படங்களில் அவர் தொடர்ந்து செய்துகொண்டிருப்பது, தான் சார்ந்திருக்கும் நிலத்தையும் அங்கிருக்கும் வாழ்வியலையும் முன்வைத்து ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கான அரசியலைப் பேசுவதுதான்.

படத்தில் வரும் எருமை கம்ப்யூட்டர் அனிமேஷனால் எடுக்கப்பட்டது. ஆனால், பார்க்க உண்மையான எருமையை போலவே தோன்றுகிறது. படத்தின் அனிமேஷன் குழு சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளது.

படத்தின் பெரும்பலமாக ஒளிப்பதிவு திகழ்கிறது. ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒப்பிட்டுப் பேசுவதற்குக்கூட இதைப்போன்ற வேறொன்று இல்லையெனும் அளவிற்கு வேலை செய்திருக்கிறார்.

இசைக்கருவிகள் இல்லாமல் குரல்களை வைத்தே பிண்ணனி இசை அமைக்கப்பட்டிருப்பது படத்தின் நகர்விற்கு பெரிதாக துணைநிற்கிறது. ரங்கநாத் ரவி மற்றும் பிரசாந்த் பிள்ளை ஒலி வடிவமைப்பில் சிறப்பான வகையில் பணியாற்றியுள்ளனர்.

உருவாக்கத்தில் மிகச்சிறப்பாக வந்திருக்கும் ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் அனிமேஷன், ஒளி-ஒலிப்பதிவு நுட்பங்களை ரசிக்க திரையரங்கில் சென்று பார்ப்பதே சிறப்பான அனுபவமாக இருக்கும்.

இந்தப்படம் டொரோண்டோ திரைப்பட விழா உள்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனித இன்னும் பல நேரங்களில் விலங்காகவே இருக்கிறான். தன்னுடைய சுயநலனுக்காக யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் அவன் வேட்டையாடத் தயாராக இருக்கிறான் என்பதை மையச்சரடாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.