Cinema

’பிகில்’ கதைத் திருட்டு சிக்கல் - சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு : சொன்னபடி ரிலீஸ் ஆகுமா ?

அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 63வது படமாக உருவாகியுள்ளது ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெளியிட தடை கோரி உதவி இயக்குநர் கே.பி.செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வருகிற 25ம் தேதி பிகில் படம் ரிலீஸாகவுள்ளது. இந்த சமயத்தில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என காப்புரிமை கோரியும் படம் வெளியிட தடை கோரியும் உதவி இயக்குநரின் வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அட்லீ மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்போது பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்திற்காகவும் வழக்குத் தொடுத்துள்ளதாக செல்வா மீது குற்றஞ்சாட்டினர்.

மேலும், அட்லீ பிகில் கதையை 2018 ஜூலையில் பதிவு செய்ததாகவும், செல்வா அதனை 2018 அக்டோபரில் பதிவு செய்ததாகவும் அவர் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது காப்புரிமை மீறல் என மனுதாரர் தரப்பு குறிப்பிடவில்லை என்றும், படம் ரிலீசாகும் போது விளம்பரத்திற்காக இவ்வாறு வழக்குப் போடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் பிகில் கதை காப்புரிமை தொடர்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் கே.பி.செல்வாவுக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, உரிமையியல் நீதிமன்றத்தில் செல்வா தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே வாபஸ் பெற்றதால் மீண்டும் அந்த நீதிமன்றத்தை அணுகக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வாறு இருக்கையில் உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது பிகில் படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.