Cinema

கதைத் திருட்டு.. அதிகரிக்கும் பட்ஜெட்.. தயாரிப்பாளர்களின் கோபத்துக்கு ஆளானாரா அட்லீ? - ரெட் கார்டு நிஜமா?

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர் அட்லீ குமார். தனது திரைப்பயனத்தை உதவி இயக்குநராகத் தொடங்கிய இவர், குறும்பட இயக்குநராக அடியெடுத்து வைத்து தற்போது முன்னணி இளம் இயக்குநராக வலம் வருகிறார்.

முதல் படமான ராஜா ராணியின் மூலம் பிரபலமடைந்த அட்லீ அடுத்த படத்திலேயே தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் ஹீரோக்களில் ஒருவரான விஜய்யை இயக்கக்கூடிய வாய்ப்பை பெற்றார். தெறி, மெர்சல் என விஜய்யுடனான அட்லீயின் கூட்டணி தொடர்ந்து தற்போது பிகில் வரை கொண்டு சேர்த்திருக்கிறது.

எவ்வளவுதான் புகழ் பெற்றாலும், அட்லீ குறித்த விமர்சனங்கள் ராஜாராணி தொடங்கி பிகில் வரை துரத்திக்கொண்டேதான் வருகிறது. தற்போது அதனைத் தாண்டி கதைத் திருட்டு விவகாரம் வரை வந்து நிற்கிறது.

இவ்வாறு இருக்கையில், தயாரிப்பாளர்கள் சார்பிலும் அட்லீ மீது புகார் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, அட்லீ நிர்ணயித்த பட்ஜெட்டைத் தாண்டி அதிக பொருட்செலவில் படத்தை இயக்குகிறார் என தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவரின் இயக்கத்தில் உருவான மெர்சல் திரைப்படத்தால், அந்த குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனம் பல கோடி ரூபாய் நஷ்டமடைந்து இருப்பதால், தயாரிப்பாளர்கள் அட்லீ மீது கடும் கோபத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் தற்போது பிகில் திரைப்படத்தில் திட்டமிட்டதைவிட பொருட்செலவு அதிகமாகி இருப்பதால் ஏ.ஜி.எஸ் நிறுவனமும் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.

அதிகரிக்கும் பட்ஜெட்டால் அட்லீயின் படங்கள் நன்றாக ஓடினாலும், எதிர்பார்த்த அளவுக்கான லாபத்தை பெற்றுத் தரவில்லை என்றும் தயாரிப்பாளர்கள் குமுறி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஆகவே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அட்லீ மீது நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டால் தமிழ் திரைப்படங்களை இயக்க முடியாத அளவுக்கு அட்லீக்கு ரெட் கார்டு போடும் சூழல் ஏற்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் கோலிவுட் உலகைச் சுற்றி வந்த வண்ணம் உள்ளது.

இருப்பினும் இயக்குநர் அட்லீ எப்போதும் போல கூலாகவே இருக்கிறாராம். ஏனெனில், அடுத்தடுத்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருவதால் இந்த விவகாரத்தை காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் பிகில் படம் வருகிற 25ம் தேதி வெளிவரவுள்ளது. இதனையடுத்து, பாலிவுட் நடிகரான ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவுள்ளார் என்றும் அதற்காக அட்லீக்கு 30 கோடி ரூபாய் அளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.