Cinema

சிம்புவின் அடுத்த படமும் கைவிடப்படுகிறதா? - தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரால் பரபரப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தொடர்ந்து சரியான படங்களை தேர்வு செய்து நடிக்காததால் தோல்வியைச் சந்தித்து வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுகளும், ஒழுங்கில்லாத செயல்பாடும் அவர் மீது திரையுலகில் கரும்புள்ளி ஏற்படக் காரணமாக அமைந்தன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த ‘மாநாடு’ படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திடீரென அறிவித்தார். இதனையடுத்து, மாநாடு படம் கைவிடப்பட்டதால் சமீபத்தில் மகா மாநாடு என்ற படத்தை தானே 125 கோடி செலவில் தயாரித்து 5 மொழிகளில் இயக்கி நடிக்க இருப்பதாக சிம்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கன்னட மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற முப்தி (Mufti) படத்தை தமிழில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கன்னடத்தில் முப்தியை இயக்கிய நார்தன் தான் தமிழிலும் படத்தை இயக்குகிறார்.

தமிழில் சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். அதற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது. சிம்பு தொடர்பான காட்சிகளும் படமாக்கப்பட்டுவந்தன.

சிம்பு படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராமல் இழுத்தடிக்க தொடங்கியுள்ளார். அப்படி வந்தாலும் நான்கு மணிநேரத்திற்கு மேல் ஷூட்டிங்கில் இருப்பதில்லை என்று புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக முதற்கட்ட படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர், வெளிநாடு சென்று திரும்பிய சிம்பு அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்கு தேதிகள் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதுதொடர்பாக சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். மேலும், இப்படத்தைக் கைவிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.