Cinema

நடிகை யாஷிகா ஆனந்த் கார் மோதி இளைஞர் படுகாயம்? குடி போதையில் விபத்து ஏற்பட்டதா? - போலிஸ் விளக்கம்!

கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர், ராஜ பீமா, இவன் தான் உத்தமன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில் நேற்று (அக்.,5) நள்ளிரவின் போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலை வழியாக வந்த சொகுசு கார் ஒன்று, அந்த பகுதியின் சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த உணவு டெலிவரி செய்யும் பரத் என்ற இளைஞர் மீது மோதியுள்ளது.

இதனால் அந்த இளைஞர் படுகாயமுற்றதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஹாரிங்டன் சாலையில் உள்ள சாலையோரக் கடை ஒன்றும் சேதமடைந்தது.

இதனையடுத்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நுங்கம்பாக்கம் போலிஸார் விசாரித்து வருகின்றனர். இதில், சொகுசு காரில் வந்தது நடிகை யாஷிகா ஆனந்த் என்றும், விபத்து ஏற்பட்டதும் அவர் வேறு வாகனத்தில் மாறிச் சென்று விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

மேலும், சொகுசு காரில் வந்தவர்கள் போதையில் இருந்ததாகவும், யாஷிகாவும் மது அருந்தியிருந்தாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் நடிகை யாஷிகா இருந்ததாக கூறப்படுவது வெறும் வதந்தி தான். விபத்து ஏற்படுத்திய சொகுசு காரில் யாஷிகா இருக்கவில்லை என்று போலிஸ் தரப்பு கூறியுள்ளது.